Friday 24 May 2013

கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிரிப்பும்

பிளாக்கில் ஒழுங்காக எழுத ஆரம்பித்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது..இரண்டு மாதத்திற்குள் என்னுடைய பிளாக்கின்  total pageviews  அதற்குள் 5000த்தை தாண்டிவிட்டது. என்ன நினைச்சா எனக்கே கொஞ்சம் சிரிப்பு சிரிப்பாத்தான் வருது..ஒரு கதை எழுதத்தெரியாது, கவிதை தெரியவே தெரியாது, அடுக்கு மொழியில் எழுதத்தெரியாது,உவமை-உருவகமெல்லாம் ஒன்றும் தெரியாது..ஆனால் என்னையும் ஒரு மனிதனாக மதித்து என்னுடைய பதிவுகளையும் தொடர்ந்து படித்து வரும் வலையுலக நண்பர்களுக்கும்  இணைய வாசகர்களுக்கும் இந்த தருணத்தில் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்..

ஏதோ என் மனதில் தோன்றும் எண்ண அலைகளையும் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து வருகிறேன்..ஆனால் எந்த ஒரு பதிவிலும் எந்த ஒரு மதத்தினரையோ,சாதியினரையோ,தனிப்பட்ட மனிதரையோ குற்றஞ்சொன்னதில்லை,குறைகூறியதில்லை..யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எந்தவொரு பதிவையும் எழுதவில்லை..இனிவரும் காலங்களிலும் நிச்சயம் அதைப் பின்பற்றுவேன்..

என்னுடைய பதிவுகள் எல்லாம் பாலச்சந்தர் சார் படம் மாதிரி..பெருசா காமெடிலாம் ஒன்னும் இருக்காது..படிக்கறதுக்கு கொஞ்சம் பொறுமை வேணும்..கொஞ்சம் ட்ரையாத்தான் இருக்கும்..அதனால்தான் இன்று கொஞ்சம்
நையாண்டியாக ஒரு பதிவு எழுதலாம் என்று முயற்சித்திருக்கிறேன்..யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை..குற்றம் குறையிருந்தால் கூறுங்கள்..

ஒரு தமிழ் 'குடிமகன்' குடிப்பதற்காக சாராயக்கடைக்குச் சென்று கொண்டிருக்கிறார்..அவரைப்பிடித்து வந்து  பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு ஒரு வினாத்தாள் எடுக்கச்சொன்னால்  எப்படி எடுப்பார் என்பதை இங்கே பதிவாக்கியுள்ளேன்..(தமிழைக் கொச்சைப்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லை..சிரிப்பதற்காக மட்டுமே..)

 1.குறிப்பு வரைக-பீர்,பிராந்தி,ரம்

2.பிரித்து எழுதுக-சாராயக்கடை

3.பொன்முடியார்   பாடலால் அறியப்படும் குடிகாரர்கள் பற்றிய செய்திகளைக் கூறுக.

4. இடம் சுட்டி பொருள் விளக்குக-சாராயம் குடிச்சாக்கா சங்கீதம் தானா வரும்

5.குடித்துவிட்டு குப்புறக் கிடந்தான்-செயப்பாட்டு வினை வாக்கியமாக்குக.

6.தண்ணித்தொட்டி தேடிவந்த கண்ணுக்குட்டி நான் என்னும் பாடலால்

அறியப்படும் வரலாற்றுச்செய்தி யாது..?

7.ஒயின்ஷாப்பின் உன்னதத்தை குவார்டர் கோவிந்தன் எவ்வாறு படம் பிடித்து காட்டுகிறார்.?

8.பெயர்க்காரணம் தருக-கள்ளச்சாராயம்.

9.வாந்தி எடுத்த தலைவனைப் பார்த்து தலைவி தோழியிடம் கூறியது யாது.?

10.தேன்மயங்கு பீரினும் இனிது அவர்நாட்டு பனைமரத்து கள் என்று தலைவன் கூறுவதிலிருந்து பெறப்படும் கருத்து யாது.?


11.சாராயத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை..?

12.சரக்கடித்தலினும் சைடிஷ் சாப்பிடுவதே சிறந்தது-விளக்குக.

13.ஒயின்ஷாப்பின் இலக்கணமாய் குறள் கூறுவது யாது..?

14.செங்கோல் மன்னன் குடிகாரர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என ஆசிரியர் கூறுகிறார்..?

15.குடிகாரர்கள் நிலைமை நெடுநல்வாடையில் எவ்வாறு விளக்கப்பெற்றுள்ளது.?.


இன்னும் சரக்கு மிச்சம் இருக்கு..இருந்தாலும் உங்களுக்கு போதை ஏறிடப்போகுது..போய்ப்படுங்க..அடுத்த பதிவில் தொடர்கிறேன்,நன்றி.....

14 comments:

  1. நல்லதொரு முடிவை தான் பின்பற்றி உள்ளீர்கள்... நையாண்டிகள் 15...! தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஒரு தமிழ்க் "குடி"மகன் ஆசிரியரா இருந்தா இப்படிதான் இருக்கும். நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.உங்க பள்ளியில எப்படி?

      Delete
  3. புதுச்சேரி ஸ்பெஷல் நையாண்டியா..?
    தொடர்ந்து ஊத்துங்க.. ஸாரி... எழுதுங்க...

    ReplyDelete
  4. தொடர்ந்து ஊத்திக்கிட்டே இருப்பன்.குடிக்க ரெடியா இருங்க.

    ReplyDelete
  5. நான் மட்டும் எல்லாம் தெரிந்தா எழுதுகிறேன்!

    மனத்தில் தோன்றுவதெல்லாம் எழுத்தில் கொண்டுவாருங்கள்;கவிதையாகும்,கதையாகும்,எல்லாமும் ஆகும்

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் நண்பா..உங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்.

      Delete
  6. நம்ம ஊருன்னா சாதாரணமா....?
    எவ்வளவு குடித்தாலும்
    மற்றவர் குடியைக் கெடுக்க மாட்டோம்“ என்பது தராக மந்திரமாச்சே...

    தொடர்ந்து தழிழைப் போதையுடன் கொடுங்கள் வாத்தியாரே.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நம்ம ஊர்க்காரர்தானா...நிச்சயம் ..நீங்களே சொல்லீட்டிங்க இல்ல..

      Delete
  7. //கொஞ்சம் ட்ரையாத்தான் இருக்கும்.// அப்படித் தெரியவில்லையே. அனைத்து இடுகைகளுமே சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. வணக்கம்
    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_745.html?showComment=1381986198691#c5683697445379674381

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரம் பற்றி இன்றுதான் அறிந்தேன்.தங்கள் அன்புக்கும் அறியப்படுத்தியமைக்கும் நன்றி.

      Delete