அனைவருக்கும் வணக்கம். நேற்று கடலூரில் உள்ள பிரபல நகைக்கடைக்குச் சென்றிருந்தேன். மனைவிக்கு ஒரு செயின் எடுப்பதற்காக மனைவியுடன் சென்றிருந்தேன்.ஒரு பத்து நிமிடத்தில் மாடல் செலக்ட் செய்து விலை பற்றி விசாரிக்கலானேன். ஏதேதோ கணக்கெல்லாம் போட்டு விற்பனைப்பெண் ஒரு பவுன் செயினின் விலை ரூபாய் 25800 என்று கணக்கு போட்டு சொன்னார். சிறிது நேரம் பேரம் பேசிய பிறகு அடுத்து ஒருவர் வந்து ஏதேதோ கணக்குப் போடத்தொடங்கினார். அவர் ஒரு 300 ரூபாய் குறைத்தார். இன்னும் எவ்வளவுதான் குறைப்பீர்கள் என்று கேட்டேன். அடுத்து முதலாளியைப் பார்க்கச் சொன்னார். அவர் மறுபடியும் முதலிலிருந்து கணக்கு போடத்தொடங்கினார். அவர் ஒரு 200 ரூபாய் குறைத்தார்.
நான் இன்னும் 500 ரூபாய் குறைக்கச்சொல்லிக் கேட்டேன். குறைக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். நானும் வேறு கடையில் வாங்கிக்கொள்கிறேன் என்று வந்துவிட்டேன். மறுபடியும் இன்று புதுவையில் இருக்கும் பிரபல நகைகடைக்குச் சென்றேன். எங்கள் கடையில் ஒரே விலை, பேரம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.நானும் சனியன் ஒழிகிறது என்று 5% சேதாரம் அழுதுவிட்டு ஒரு பவுனில் ஒரு செயின் வாங்கி வந்தேன். நகைக்கடைக்குச் சென்றால் இதெல்லாம் சாதாரணம்தானே ,இதற்கு எதற்கு ஒரு பதிவு என்றுதானே நினைக்கிறீர்கள்.இப்படி நினைத்துத்தான் தினம்தினம் நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். சேதாரம் என்னும் பெயரில் நம் முதுகில் தினமும் ஏறிக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேதாளத்தைப்பற்றிய பதிவுதான் இது.
இலண்டனில் ஒரு பெண்மணி நகைக்கடைக்குச் சென்றிருக்கிறார். சேதாரம் எல்லாம் கொடுத்து ஒரு நகையை வாங்கியிருக்கிறார். பிறகு நேராக நுகர்வோர் கோர்ட்டுக்குச் சென்று நகையின் விலையைவிட அதிகமாக எதற்குச் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்துவிட்டார்.. அப்புறம் என்ன , சேதாரம் என்று வாங்கிய தொகையை திரும்பவும் பெண்மணியிடம் திருப்பித்தருமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. என்னதான் சொல்ல வர்ர என்றுதானே கேட்கிறீர்கள்.
உண்மையில் எந்தவொரு நகைக்கடைக்காரருக்கும் சேதாரம் என்று எந்தவொரு சேதமும் நிகழ்வதில்லை.அவையெல்லாம் நம்மை ஏமாற்ற அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அஸ்திரமே என்பதை நீங்கள் எப்போது உணரப்போகிறீர்கள்? பொற்கொல்லர்கள் நகை செய்யும்போது அதிலிருந்து விழும் கண்ணுக்குத் தெரியாத துகள்களைக்கூட மீண்டும் பெருக்கியெடுத்து உருக்கி விடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்புறம் எங்கே நேர்கிறது சேதாரம்? இனிமேலாவது விழிப்போடு இருங்கள்.0% முதல் 7%வரை சேதாரமும் ஏமாற்று வேலையே, 9.99% சேதாரமும் ஏமாற்று வேலையே...
இனி எந்த நகைக்கடைக்குச் சென்றாலும் ஏன் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேளுங்கள்.உங்கள் வெறித்தனமான கேள்விகளால் விற்பனையாளரை விழிபிதுங்கச்செய்யுங்கள். அப்புறம் 916 நகை என்று கூறுவார்களே கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுவேறு ஒன்றும் இல்லை. சாதாரண 22 கேரட் தங்கத்தையே 916 நகை என்று கூறி செப்படி வித்தையெல்லாம் காட்டுகிறார்கள். அதாவது சுத்தமான தங்கத்தை 24 கேரட் என்று கூறுவது வழக்கம்.நகை செய்யும்போது 22 பங்கு தங்கமும் 2 பங்கு செம்பும் கலந்து செய்வதை அனைவரும் அறிவீர்கள் அல்லவா? 24 கேரட்டில் 22 பங்கை சதவீதம் ஆக்கிப்பாருங்கள், 91.6% வரும்.இந்த சாதாரண 22 கேரட் தங்கத்தையே 916 நகை அப்படி இப்படி என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் நான் புலம்பித்தீர்த்தாலும் பெண்களின் நகை மோகம் தீரும்வரை ,வரதட்சணை என்னும் கொடிய பேய் ஒழியும்வரை இத்தகைய ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்