Wednesday 30 October 2013

அரசுப்பள்ளி என்றால் அவ்வளவு அலட்சியமா...?

அரசாங்கப்பள்ளி என்றாலே அவ்வளவாக யாரும் மதிப்பதில்லை..மக்களின் பார்வையில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்...ஆனால் நேரடியாக வந்து பார்ப்பவர்களால் மட்டுமே அரசுப்பள்ளியின் குறைபாடுகளுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியும்..

மக்களின் பார்வையில் அரசுப்பள்ளி மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கள்,,

1.மாணவர்கள் ஒழுங்காகப் படிப்பதில்லை.

2.மாணவர்கள் ஒழுக்கமாக இல்லை..

3.மாணவர்கள் அழகாக உடையணிந்து வெளிநாட்டுக்காரன் மாதிரி இல்லை.

4.பள்ளி வளாகம், வகுப்பறைகள் அழகாக இல்லை.

5.பல்வேறு மொழிக்கற்பித்தல் இல்லை.

   இன்னும் பலப்பல கூறிக்கொண்டே இருப்பார்கள்...

ஆனால் தனியார் பள்ளிகளில் படிப்பதால் மட்டுமே ஒருவன் வாழ்க்கையை சுயசார்புள்ளவனாக வாழ்ந்துவிட முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்..

தனியார் பள்ளி மாணவர்களுக்கு தன் சொந்தக்காலில் நிற்கும் திறமை இருக்குமா என்பதே சந்தேகமே...

மனப்பாடம் மட்டுமே செய்து வாந்தி எடுக்கும் அவர்கள் மேல்படிப்புகளில் பெரிதாக ஜொலிப்பதில்லை..

எல்லாவற்றிற்கும் பிறரைச் சார்ந்தே இருப்பர்..ஒரு சிறிய வேலையைக்கூட சொந்தமாக செய்துகொள்ள இயலாதவர்களாத்தான் இருப்பார்கள்.

அதிகமான தனியார் பள்ளிகளில் உடற்பயிற்சி,விளையாட்டு என்ற பாடவேளையே இருப்பதில்லை..அப்பறம் எப்படி அவர்களால் உடல்திறனோடு இருக்கமுடியும்..

இலட்ச இலட்சமாய் பணத்தை செலவு செய்து படிக்கும் அவர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருப்பார்கள்..அவர்களிடம் அன்பு,கருணை,மனிதாபிமானம் ஆகியவற்றை நிச்சயமாய் எதிர்பார்க்க முடியாது..

சாலையில் ஒருவன் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது ஓடிச்சென்று அவனுக்கு உதவி செய்யும் முதல் ஆள் அரசுப்பள்ளியில் படித்த ஒருவனாகத்தான் இருப்பான்..வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழலில் சாதாரண ஒரு செயலைக்கூட தானே செய்து கொள்ளும் ஆற்றல் அரசுப்பள்ளி மாணவனுக்குத்தான் இருக்கும் ..அங்கே தனியார் பள்ளியில் படித்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல்தான் தவித்து நிற்பார்கள்..

அடுத்தவங்கள குறைசொல்றத விட்டுட்டு உன் முதுகை முதலில் பார் என்று நீங்கள் சொல்வது புரிகிறது...உண்மைதான் அரசு பள்ளிகளில் ஆங்காங்கே குறைகள் இருப்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்...

ஆனால் தனியார் பள்ளிகளின் மாயையான தோற்றத்தைக்கண்டு அரசுப்பள்ளிகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்பதே என் கருத்து...அரசுபள்ளிகளிலும் எந்நேரமும் மாணவர்களின் நலனையும் பள்ளியின் வளர்ச்சியையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள்...இப்பதிவை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்...

நான் காரைக்காலில் பணிபுரிந்தபோது ஒருஆசிரியை சரியாக 9.30 மணிக்கு பள்ளிக்கு வருவார்...ஏதோ பெரிய உலக அரசியல் அறிஞர் போல கையில் செய்தித்தாளோடுதான் பள்ளிக்கு வருவார்...காலையில் வகுப்புக்குள் சென்றதும் செய்தித்தாளைப் பிரித்துப் படிக்கத் தொடங்குவார்...மாலையில் வீட்டுக்குச் செல்லும் வரை செய்தித்தாளின் ஒருவரியைக்கூட விடாமல் படித்துமுடித்து விட்டுத்தான் வீட்டுக்குச் செல்வார்...அவரின் கடமை உணர்ச்சியைக்கண்டு பலசமயங்களில் நான் மெய்சிலிர்த்ததுண்டு..

நல்ல ஆசிரியர்களுக்கு மத்தியில் இதுபோன்ற ஒருசில புல்லுருவிகளால்தான் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவப்பெயர்...என்ன பிரச்சினையென்றால் மற்ற அரசுத்துறைகளில் தவறு செய்தால் பெரிதாக எந்த இழப்பும் ஏற்படாது..ஆனால் ஒரு ஆசிரியர் சரியில்லையென்றால் அவரிடம் படிக்கும்  அத்தனை மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை அவர்கள் உணரவேண்டும்...நிச்சயம் அவர்கள் உணரமாட்டார்கள்..

நம்ம நாட்டுல எப்பவுமே அன்பா சொன்னா எவணும் கேக்க மாட்டான்..தண்டனை கிடைக்கும் என்ற பயம்வந்தால் மட்டுமே ஒழுங்கா வேலை செய்வாங்க..அத்தகைய ஆசிரியர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.. அப்படி நடந்தால் அரசுப்பள்ளிகளும் ஒருநாள் அகிலத்தில் உயரும்...

ஏதேதோ எழுத நினைத்து எங்கேயோ முடித்திருக்கிறேன்...பின்னூட்டங்களில் மீதமிருப்பவற்றை அலசுவோம்...நன்றி...

Saturday 26 October 2013

தீபாவளியோடு சேர்த்து எங்கள் பள்ளிக்கும் தீப ஒளி ஏற்றுங்கள்...

நான் சிறுவயதில் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரிவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்...என்னை ஒரு ஆசிரியராக்கிய பள்ளிக்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது...என் மாணவனுக்கு நான் என்ன செய்தேன் என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன்..புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சிறந்த பள்ளியாக மாறிக்கொண்டிருக்கிறது எங்கள் பள்ளி...மாணவர்களின் நலனையும் பள்ளியின் வளர்ச்சியையும் பற்றியுமே சிந்திக்கும் சிறப்பான பத்து ஆசிரியர்களைக் கொண்ட பள்ளி...தனியார் பள்ளிகளுக்கு இணையாக எங்கள் பள்ளியையும் முன்னேற்ற வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம்..இந்தியாவின் சிறந்த ஆயிரம் பள்ளிகளில் ஒரு பள்ளியாக எங்கள் பள்ளியின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது...தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்று எங்கள் பள்ளி மாணவர்கள் மூன்று முறை டெல்லி சென்று வந்திருக்கிறார்கள்...புதுவை மாநிலத்திலேயே தேசிய அளவிலான ஓவியப்போட்டிக்கு இதுவரை வேறு எந்த அரசுப்பள்ளியும் தேர்வு பெற்றதில்லை என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறேன்..அழகான மூலிகைத்தட்டம் ஒன்றை வைத்து சிறப்பாக பராமரிக்கிறோம்...அரசு பள்ளி என்றாலே 30 முதல் 40 மாணவர்கள்தான் படிப்பார்கள் என்ற நிலையில்லாமல் எங்கள் பள்ளியில் 320 மாணவர்கள் படித்து வருகின்றனர்..புதுச்சேரியிலேயே அதிக மாணவர்களைக்கொண்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று...எங்கள் பள்ளியின் வளர்ச்சிகளை மேலும் அதிகரிக்கவும் கணினிக்கல்வியை மேம்படுத்தவும் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தவும் உங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்..எங்கள் பள்ளியின் அவ்வப்போதைய வளர்ச்சியை gpsmadukarai.blogspot.com என்ற வலைப்பூவில் அறிந்துகொள்ளுங்கள்..சினிமா பார்ப்பதற்கும்,ஓட்டலில் சென்று பந்தாவாக சாப்பிடுவதற்கும் எவ்வளவோ பணத்தை வீணாக்குகிறோம்..அதில் ஒரு சிறுபகுதியை  எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு செருப்பு வாங்கவும் நோட்டு புத்தகம் வாங்கவும் உதவும்...ஆயிரக்கணக்கில் செலவுசெய்து பட்டாசுவாங்கி வளிமண்டலத்தை கரிமண்டலமாக்கிக் கொண்டிருக்கும் கணவான்களே !!!
அதில் ஒரு பட்டாசுசரம் வாங்கும் பணத்தை ஒரு ஏழைமாணவனுக்குக் கொடுத்தால் கிழிந்த ஆடைக்குப் பதிலாக ஒரு நல்ல சீருடை வாங்கித்தர முடியும்...ஒரு ஏழை மாணவனின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமை உங்களையும் சாரும்...சென்ற ஆண்டும் இதேபோல் ஒருசில நண்பர்களிடம்  உதவிகேட்டிருந்தேன்..என்னுடைய வங்கிக்கணக்கிற்கு பணம் போடுமாறு கேட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் பின்புதான் அறிந்துகொண்டேன்..என்னுடைய பெயருக்குப் பணம் அனுப்பினால் அப்பணம் தவறான முறையில்கூட பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது...ஆகவே உங்களால் முடிந்த சிறு உதவியானாலும் பரவாயில்லை..(.சிறுதுரும்பும் பல்குத்த உதவும்..).  GOVT PRIMARY SCHOOL,MADUKARAI,PUDUCHERRY-605105 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நட்புடன் வேண்டுகிறேன்...புதுச்சேரியின் ஒரு முன்மாதிரிப் பள்ளியாக எங்கள் பள்ளியும் ஒருநாள் மாறும் என்ற கனவுகளோடு .......உங்கள் கலியபெருமாள்...

Wednesday 9 October 2013

மாமியார் மருமகள் பிரச்சினைகள்- ஒரு சமநிலையான அலசல்.

EVERY HOME HAS A SKELETON IN ITS CUPBOARD என்றொரு பழமொழி உண்டு ஆங்கிலத்தில்..வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள் தமிழில் அழகாய்...ஆம் பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களும் இல்லை ,மனிதனும் இல்லை..ஆனால் இந்தியாவில் மனிதனால் கடைசி வரை தீர்க்கவே முடியாத இரண்டு பிரச்சினைகள் உண்டென்றால் அது கடன் பிரச்சினையும் ,மாமியார் -மருமகள் பிரச்சினையும்தான்.

.நீ என்னப்பா பொம்பள மாதிரி லேடிஸ் பிரச்சினை பத்திலாம் பேச ஆரம்பிச்சட்ட என்று கேட்பது புரிகிறது...ஆனால் இப்பிரச்சினையால் நடுவில் மாட்டிக்கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாய் சிக்கித்தவிப்பது நாம்தானே....கண்டுபிடிச்சீட்டீங்களா..(ஆமாம் அதேதான் நம்ம வூட்லயும் இதே பிரச்சினைதான்..)

அந்தக்காலத்தில் நிறைய கல்வியறிவில்லாக் காலத்தில் மட்டுமல்ல வளர்ந்துவரும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் தீர்க்கமுடியாத ஒரே பிரச்சினை இந்த மாமியார்-மருமகள் பிரச்சினைதான்...

இப்பிரச்சினைக்கெல்லாம் ஒரே காரணம் ஈகோ பிரச்சினைதான்..விட்டுகொடுக்கும் மனப்பான்மை இருவரிடமுமே இல்லாமல் போவதுதான்...ஆண்டு அனுபவித்து பல்வேறு அனுபவங்களைப் பெற்ற பெரியவர்களே விட்டுக்கொடுத்து போகாதபோது  இருபது வயது மருமகளிடம் எப்படி விட்டுக்கொடுக்க எதிர்பார்க்க முடியும்...

நான்  என் மனைவியிடம் அடிக்கடி சொல்லுவேன்...ஆயிரம் ஆம்பளங்க இருந்தாலும் அந்த இடத்துல எந்த பிரச்சினையும் வராது..ஆனா ரெண்டு பொம்பளங்க போதும் ஒரு ஊரே அழியறதுக்கு என்று...(நல்ல மாமியார் மருமகள் யாராச்சும் இருந்தா அடியேன அடிக்காம மன்னிக்கனும்)

முக்கியமாய் பிரச்சினை வரும் ஒருசில காரணங்களை இங்கே பட்டியலிடுகிறேன்..அவை எல்லா காலத்திற்கும்,எல்லாருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்..

1.மாமியார் சொன்ன சாப்பாட்டை மருமகள் செய்யவில்லை.
2.வேறு யாரையோ திட்டும்போது தன்னைத்தான் திட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வது(உண்மையிலும் அப்படி நடப்பதுண்டு)..
3.தன் வீட்டார் வரும்போது மாமியார் அவர்களிடம் பேசாமல் அவமதிப்பது..
4.சரியான நேரத்திற்கு சாப்பாடு தயார் செய்யாமல் அல்லது பரிமாறாமல் இருப்பது..
5.புதிதாக முளைத்திருக்கும் பிரச்சினை- தொலைக்காட்சி பார்ப்பதில் மாமியார் மருமகளிடையே உள்ள கருத்து வேறுபாடு...

எந்தப்பக்கம் சுற்றிப்பார்த்தாலும் பிரச்சினை இதைச்சுற்றித்தான் இருக்கும்..

இருவரின் சண்டையெனும் தீயில் நடுவில் மாட்டிக்கொண்டு கருகுவது கணவன்மார்கள்தான்..அந்தக்காலத்தில் ஸ்டவ் வெடித்து மருமகள்கள் மட்டும் தான் கருகினார்கள்..ஆனால் இப்போ அவங்க ரொம்ப தெளிவாயிட்டாங்க..நம்மள எரியவிட்டுட்டு அவர்கள் குளிர் காய்கிறார்கள்..இதனாலதான் நெறைய ஆம்பளைங்க கருப்பா இருக்காங்க போலப்பா...

இதில் கணவனாகப்பட்டவன் யார்பக்கம் பேசமுடியும்..யாரை விடுவது,யாரை விட்டுக்கொடுப்பது  ...முதியோர் இல்லங்கள் தோன்றுவதை நான் சத்தியமாய் நியாயப்படுத்தவில்லை..ஆனால் அவை தோன்ற என்ன காரணம் என்று ஒருதலைப்பட்சமாய் யோசிக்காமால் இருபக்கமும் யோசித்துப்பாருங்கள்..பெற்ற தாயை தெருவில் விடும் அளவுக்கு உலகில் எல்லோருமே மனசாட்சி இல்லாத மனிதர்களா...

இங்கிருந்தால்தான் எப்பொழுதும் பிரச்சினையாய் இருக்கிறது..அவர்கள் அங்காவது நல்லபடியாய் இருக்கட்டும் என்று கூட அந்த தாயின் மகன் நினைத்திருக்கலாம் அல்லவா  ...அவனும் என்னதான் செய்வான்..

நீ சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதானே கூறுகிறீர்கள்...பெற்றதாய் தந்தையர் முக்கியம்தான்...இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்திதான்...மனைவி சரியில்லையென்று தினம் ஒரு திருமணம் செய்யமுடியுமா...எனக்கு என் தாய்தந்தையர்தான் முக்கியம்.,நீ தேவையில்லை என்று ஒவ்வொரு கணவன்மாரும் கூறத்தொடங்கிவிட்டால் அப்புறம் இந்தியாவில் ஒருநாளைக்கு ஒருலட்சம் விவாகரத்துக்கள் அரங்கேறும்...

மாமியார்கள் தன் மருமகளை மறு மகளாய்ப் பார்க்கும் காலம் வரும் வரை இப்பிரச்சினை ஓயாது..மருமகள்களும் மாமியாரை மற்றொரு தாயாய் பார்க்கும் வரை இப்பிரச்சினை மாறாது....

ஆயிரம் முதியோர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்  என்றால் அவர்களின் அத்தனை பிள்ளைகளுமே சுயநலக்காரர்கள்,மனசாட்சியே இல்லாதவர்கள்  என்று அர்த்தமல்ல என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து..(ஐயோ சத்தியமா நான் அப்படிலாம் எதுவும் பண்ணலீங்க..என்னை தப்பா நெனைக்காதீங்க..)

இப்பதிவு எழுதத் தொடங்கும்போதே எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்று தெரியும்..நான் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்...இன்னும் விரிவாக எழுதவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்..ஆனால் மாமியார்-மருமகள் பிரச்சினைய ஒருநாள்ள  பேசிமுடிக்க முடியாதுப்பா...எனக்கு இப்பவே கண்ணக்கட்டுது..ஆளவிடுங்க சாமி...





Monday 7 October 2013

இரத்தம் கொடுக்கப் போன கதை...

பதிவுலகம் பக்கம் தலைகாட்டி ரொம்ப நாளாச்சு..நீங்க எல்லாம் என்ன மறந்து இருப்பீங்கனு நெனைக்குறன்..(அப்புடியே போய்த் தொலைய வேண்டியதுதானேடா..உன்ன யாரு ரீஎன்ட்ரிலாம் கொடுக்கச் சொன்னது...இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளமாய் உங்கள் முன் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி)...

இணைய இணைப்பு இல்லாததாலும் பள்ளிப் பணிகளில் மூழ்கிவிட்டதாலும் பதிவுகள் எழுதமுடியவில்லை..எங்க ஊர்ல இப்பதான் காலாண்டு விடுமுறை..என் இம்சையை இந்த ஒருவாரம் பொறுத்துக்கோங்க...

கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்..விடுமுறை நாளொன்றில் பள்ளியில் என்னுடன் பணிபுரியும் நண்பன் மோகனிடமிருந்து காலையிலயே செல்பேசியில் அழைப்பு வந்தது..சற்று பதற்றத்துடன் பேசினான்...தன்னுடைய நண்பனின் மனைவிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் உடனடியாக B NEGATIVE இரத்தம் வேண்டும் என்றும் கூறினான்...என்னுடைய இரத்தம் அதே வகைதான் நானே தருகிறேன் என்று கூறினேன்...

உடனே நான் கனவுலகில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன்...தேர் கொடுத்தவன் ,போர்வை கொடுத்தவன் எல்லாம் வள்ளல் எனும்போது நான் என் உடம்பின் இரத்தத்தையே தானமாகத் தரப்போகிறேன்..அப்படியென்றால் நானும் வள்ளல்தானே...நாளைக்கு நம்ப பேர்லாம் பேப்பர்ல வரும்...பாடப்புத்தகத்துல்லாம் நம்மளப்பத்தியும் எழுதுவாங்கனு ஓவரா பில்டப்லாம் பண்ணிக்கிட்டு கிளம்பினேன்...

அங்க ஒருத்தங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க..நீ என்னானா சல்லிப்பயலாட்டம் கனவு கண்டுட்டு இருக்கியானு திட்டாதீங்க..பொதுநலத்துலயும் கொஞ்சம் சுயநலம் இருக்கத்தானே செய்யுது...

எங்கள் ஊரிலிருந்து கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் புதுச்சேரியின் ஒரு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்திருந்தார்கள்...நானும் உடனடியாக கிளம்பினேன்...

உடனே என் மனைவி வந்து போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று பாடத்தொடங்கிவிட்டாள்...யாரென்றே தெரியாதவர்களுக்கு நாம் ஏன் ரத்தம் கொடுக்க வேண்டும்,நீ என்ன மாமனா மச்சானா என்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாள்...

நம்ம ஊரு பொண்ணுங்க நாடகத்த பாத்துட்டு நாலுமணி நேரம் அழுவாங்க..ஓவர் செண்டிமென்ட்லாம் பேசுவாங்க...ஆனா அடுத்தவங்களுக்கு உதவி செய்யனுனா மட்டும் சுயநலமா மாறிடுவாங்க...ஊர்ல எத்தன பேரு இருக்காங்க அவங்களாம் செய்யட்டும்..நாம் ஏன் செய்யவேண்டும் என்பார்கள்..(தாய்க்குலம்லாம் உடனே சண்டைக்கு வந்துடாதீங்க...நான் எல்லா பெண்களையும் சொல்லவில்லை...)

ஒருவழியாக என் மனைவியை சமாதானப்படுத்திவிட்டுப் புறப்பட்டேன்..நண்பனின் பைக்கில் வேகமாகச் சென்றோம்..ஒருமணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்துவிட்டோம்...என் நண்பன் மோகனின் நண்பர் அழுதுகொண்டிருந்தார்...அவரை ஏதோ சமாதானம் செய்துவிட்டு இரத்தம் கொடுக்கப் புறப்பட்டேன்...

இரத்தம் கொடுக்கும் இடத்தில் ஒரு இளம்பெண் இருந்தார்...நீங்க இதுக்கு முன்னாடி இரத்தம் கொடுதததுண்டா,ஏதாவது வியாதி இருக்கிறதா,ரொம்ப நாளா ஏதாச்சும் மாத்திரை சாப்டுண்டு இருக்கேளா போன்ற கேள்விகளைக் கேட்டார்..எல்லாவற்றுக்கும் ஹரிசாண்டலாய் தலையாட்டினேன்...

உண்மையிலேயே உங்கள் இரத்தம் b negative தானா என்று கேட்டார் அந்தப்பெண்...உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை என்றேன்..ஏதாவது எய்ட்ஸ் இருந்து தொலைக்கப்போகுதுனு இரத்தம் செக் பண்ணாங்க...அந்தப் பெண் திரும்பி வந்து கூறியபதில் என்னை அதர்ச்சிக்குள்ளாக்கியது...

ஏங்க உங்க இரத்தம் பி நெகடிவ்வே இல்ல ..பி பாஸிட்டிவ்...பெருசா வந்துட்டார் கர்ணமகாராஜா மாதிரி என்று அந்தப்பெண் நினைத்ததை என்னால் யூகிக்க முடிந்தது...எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..இல்லைங்க நான் ஏற்கனவே இரத்தப் பரிசோதனை செய்திருக்கிறேன்,எனக்கு நன்றாகத் தெரியும் என்றேன்..அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை...அங்கிருந்த வேறொரு ஆளிடம் என்னுடைய இரத்த மாதிரியைக்காண்பித்தார்...அவரும் பார்த்துவிட்டு  ஆமாம் பி பாஸிட்டிவ்தான் என்று கூறிவிட்டார்...கூச்சத்தால் என் முகம் நாணியது...(பேப்பர்ல பேர் வராம போயிடுச்சு அத விடுங்க)..என் நண்பனின் நண்பர் என்னைப்பற்றி என்ன நினைப்பாரோ...(கைகொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று பேக்ரவுண்டில் பாட்டெல்லாம் ஓடத்துவங்கியது..)எப்படியோ இரத்தவங்கியில் இருந்த இரத்தத்தைக்கொண்டே நண்பரின் மனைவியைக் காப்பாற்றிவிட்டார்கள்..

போனமச்சான் திரும்பிவந்தான் என்ற கதையாய் வெட்கத்தோடு திரும்பிவந்தேன்...வீட்டிற்கு வந்து நடந்ததை என் மனைவியிடம் கூறினேன்..அவளுக்கோ உள்ளூற மகிழ்ச்சி எப்படியோ நம் கணவருக்கு இரத்தம் எடுக்கவில்லை என்று...அடுத்து நான் செய்த முதல்வேலை ஒரு லேப் க்கு சென்று என்னுடைய இரத்தத்தைப் பரிசோதனை செய்தேன்..

அங்கே மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது....கன்ஃபார்மா உங்க இரத்தம்  B NEGATIVE தான் என்றார்கள்....அந்தப்பொண்ணு ஏம்பா அப்புடிச் சொல்லுச்சு..நான் எதுக்குப்பா சரிப்பட்டு வரமாட்டன்......