Sunday 31 December 2017

போதையில்லாத புத்தாண்டு வேண்டும்!!?

புத்தாண்டை எண்ணி புலகாங்கிதம் அடையமுடியவில்லை... புதுவசந்தம் வந்ததென்று புன்முறுவல் பூப்பதில்லை..

புத்தகச் சுமையில்லா பள்ளி என்று வருமோ,
 புகையில்லாத காற்று என்று இருக்குமோ,

போதையில்லா சமூகம் என்று தோன்றுமோ,

புழுதி இல்லாத சாலைகள் உருவாகுமோ,

புரிதலுடன் குடும்பங்கள் என்று இணையுமோ,

புதுமைகளைப் படைக்க இளைஞர்கள் என்று புறப்படுவார்களோ,

பொதுவுடைமைக்காக புரட்சிகள் உதயமாகுமோ,

பூசல் இல்லாமல் மாநிலங்கள் ஆகுமோ,

பூரணமான புத்தாண்டு அன்றுதான் என் தேசத்திற்கு...

இருந்தாலும் என்றாவது ஒருநாள் என் தேசம் முன்னேறிவிடும் என்று வாழும் நேர்மறை மனிதர்களுக்காக என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Thursday 28 December 2017

இந்திய மாநிலங்களும் தலைநகரங்களும் -இசை வடிவில்

அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் மீண்டும் பதிவுலகம் பக்கம் தலைகாட்டிவிட்டு போகலாம் என்று வந்தேன்...போனவருடம் இந்திய மாநிலங்கள் கற்பித்தல் சிறுமுயற்சி என்னும் தலைப்பில் ஒரு சிறு பதிவு எழுதியிருந்தேன்..அதற்கு சில ஆசிரியர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது..என் நண்பர்களிடம் அதைப்பற்றி கூறியபோது மாநிலங்கள் பெயர் மட்டும்தான் பாடுவார்களா? தலைநகரங்கள் தெரியாதா? என்று கேட்டார்கள்..அந்த கேள்விதான் இன்று பதிலாக வந்திருக்கிறது...ஏதோ எனக்குத் தெரிந்த மெட்டில் ஒரு பாடலாக உருவாக்கியிருக்கிறேன்...இசையமைத்துப் பாடுமளவுக்கு இசை ஞானமெல்லாம் கிடையாது..இந்த காலத்து மாணவர்களுக்கு எப்படிப் பாடினால் பிடிக்கும்  என்று யோசித்து முயற்சித்திருக்கிறேன்..என் முயற்சி வீண்போகாது என்று நம்புகிறேன்...அடுத்த வாரத்திற்குள் என் மாணவர்களை மாநிலங்களையும் தலைநகரங்களையும் பாடவைத்துவிடுவேன்  என்று நம்புகிறேன்...


உங்களுக்கும் பிடித்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் முயற்சித்துப் பாருங்கள்...உண்மையைச் சொல்லப்போனால் பலநேரங்களில் வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரத்தைக் கேட்டால் நமக்கே தடுமாற்றம் வரும்..ஆனால் இப்பொழுது நான் கற்றுக் கொண்டேன்... என்னாலான இந்த சிறுமுயற்சி யாருக்கேனும் பயன்பட்டால் கடலளவு மகிழ்ச்சி..என் முகத்தைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்னுதான் முகம் காட்டாமல் பாடியிருக்கிறேன்..அடுத்த பதிவில் சந்திக்கும்வரை உங்கள் கலியபெருமாள்..உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து....

Monday 4 December 2017

எல்.ஐ.சி பாலிசியுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

அதுக்கு ஆதார் இதுக்கு ஆதார்னு இணைக்கச் சொன்னாங்க..இப்போ LIC policy -யையும் ஆதாரோட இணைக்கச் சொல்லி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..அதுவும் டிசம்பர் 31க்குள்...ஆனால் அதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை..ஆன்லைனிலேயே ஆதாரை இணைக்க LIC link கொடுத்துள்ளது..

licindia.in தளத்தினுள் சென்று link aadhaar இணைப்பை சொடுக்கினால் சில instructions வரும்..

உங்கள் ஆதார் எண்ணையும் PAN எண்ணையும் தயாராக வைத்துக்கொள்ளவும்..உங்கள் பாலிசி எண்களையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்..proceed கொடுத்தால் புதிய window வரும்..

அதில் உங்கள் பெயர்,பிறந்த தேதி.,உங்கள் மெயில்,ஆதார் எண்.,PAN எண்,மொபைல் எண்.,பாலிசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு GET OTP பட்டனை அழுத்தினால் உங்கள் மொபைலுக்கு ஒரு OTP எண் வரும் ..அதை enter செய்து முடித்துவிட்டால் போதும் உங்களது LIC policy ஆதார் மற்றும் PAN உடன் இணைக்கப்பட்டுவிடும்..
பலருக்கும் எளிமையானதாக இருந்தாலும் சிலருக்குப் பயன்படலாம் என்பதால் பகிர்கிறேன்..இன்றே இணைத்திடுங்கள் உங்கள் எல்.ஐ.சியை ஆதாருடன்..ஒரே சமயத்தில் நிறைய பாலிசிகளையும் add policy கொடுத்து இணைக்கலாம்...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை நன்றியுடன் கலியபெருமாள்..

Wednesday 9 August 2017

எல்.ஐ.சி (LIC)- சில பயனுள்ள தகவல்

 நீ எப்படா LIC ஏஜன்டா ஆனன்னு கேக்கறீங்களா...அப்படிலாம் ஒன்னுமில்லீங்க..ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷயத்த நாலு பேருக்கு சொல்லுவோமே..அதுக்குத்தான் இந்த பதிவு..
LIC பயனுள்ளதா ,பயனற்றதா என்பது அவரவரின் தனிப்பட்ட கருத்து..தினக்கூலி வேலைசெய்யும் கூலித்தொழிலாளி சேமிக்கும் ஒரு 500 ரூபாய்  தன் மகளின் திருமணத்திற்கு உதவும் 50000 ரூபாய் LIC பாலிசி உண்மையில் உயர்ந்ததே..


 எல்.ஐ.சி பாலிசி போட்டு வைத்திருப்பவர்கள் பாலிசி பத்திரங்களை முதலில் ஒரு xerox copy போட்டு வீட்டில் வைத்துக்கொள்ளவும்..எப்பொழுதாவது தொலைந்துவிட்டால் வேறு duplicate bond பெற உங்கள் பாலிசி எண் அவசியம்..அப்பொழுது xerox copy உதவும்..சில நேரங்களில் தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்தால் பாலிசி பாதிப்படையலாம்.அதனால் உங்கள் மொபைலில் ஒரு போட்டோ எடுத்துக்கூட சேமித்து வைத்துக்கொள்ளலாம்..
பாலிசி தொலைந்துவிட்டால் வேறு பாலிசி பெறுவது எப்படி ?...

LIC அலுவலகத்தில் தெரிவித்தால் ஒரு விண்ணப்பம் கொடுப்பார்கள்..அதைப்பூர்த்தி செய்யவேண்டும்..பிறகு பத்திரப்பதிவு அலுவலகம் சென்று LIC of INDIA ,PUDUCHERRY என்ற பெயரில் 100 ரூபாய் பத்திரம் ஒன்று வாங்கவேண்டும்..அதில் அருகிலுள்ள நோட்டரி பப்ளிக்கிடம் சென்று விவரம்,பாலிசி எண் கூறினால் அவர் அந்த பத்திரத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தருவார்..அவ்வளவுதான் வேலை முடிந்தது..அதைக் கொண்டுபோய் எல்.ஐ.சி அலுவலகத்தில் கொடுத்தால் உங்கள் முகவரிக்கு புதிய duplicate பாலிசி வந்துவிடும்..

எல்.ஐ.சி பாலிசியின் எளிய கடன் வசதி..
 உங்கள் எல்.ஐ.சி பாலிசி மூலம் மிகக்குறைந்த வட்டியான 9% ல் குறைந்த அளவில் அவசரத்தேவைக்கு கடன் பெற முடியும்..நீங்கள் 1000 ரூபாய் பாலிசி பத்து வருடங்களுக்கு மேல் கட்டினால் குறைந்தது 50000 ரூபாய்க்கு மேல் கடன்பெற முடியும்..அதுவும் மூன்றை நாளில் நேரடியாக உங்கள் வங்கிக்கணக்கில்..எல்.ஐ.சி அலுவலகத்தில் கடன் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உங்கள் ஏஜன்டிடம் அதில் கையொப்பம் பெற்று கொடுத்தால் போதும்..விண்ணப்பத்தில் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை எழுதிவிட்டால் போதும்.,இரண்டே நாளில் உங்கள் வங்கிக்கணக்கில் கடன்தொகை வந்துவிடும்..வெறும் முக்கால் பைசா வட்டியில் வங்கிகள் கூட கொடுப்பதில்லை..

ஏதோ எனக்குத் தெரிந்த சில தகவல்கள்..யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்...

Monday 29 May 2017

தோற்ற படங்களின் தோற்காத பாடல்கள்

இசைப்பிரியர்களுக்கான அடுத்த பதிவு.தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் கூட சில நேரங்களில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்ததுண்டு..இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம் போன்ற ஜாம்பாவான்கள்  கூட மிகப்பெரிய சறுக்கல்களைக் கண்டதுண்டு..இதில் சாதாரண நடிகர்களின் படங்கள் தோற்பது ஒன்று ஆச்சரியம் இல்லை..அப்படி மொக்கை வாங்கிய சில படங்களில் ஒருசில பாடல்கள் மட்டும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுண்டு..அப்படிப்பட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் டாப் 10 உங்களுக்காக..

10. மலர்களே மலர்களே
படம்: லவ் பேர்ட்ஸ்

பிரபுதேவா, நக்மா இணைந்த இரண்டாவது படம்..காதலன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு பிரபுதேவா பெரிய மொக்கை வாங்கிய படம்..அதுவும் இயக்குனர் பி.வாசுவின் படம்..ஆனால் பாடலோ சித்ராவின் குரலில் பெரிய ஹிட் ..நீங்களும் கேட்டுப் பாருங்கள்..

9. இளவேனில் இது வைகாசி மாதம்
 படம் : காதல் ரோஜாவே

இயக்குனர் கேயாரின் படம்..விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா குமார்தான் ஹீரோயின்..இளையராஜாவின் தேனிசையில் எஸ்.பி.பியின் மனம் மயக்கும் பாடல்.

8. இளநெஞ்சே வா
படம்: வண்ணவட்ணப் பூக்கள்

இயக்குனர் பாலுமகேந்திராவின் படம்..பிரசாந்த் காட்டுக்கு சைக்கிள போய்க்கிட்டே பாடுவார்..ஜேசுதாஸ் குரலில் அருமையான பாடல்..படம்தான் பாக்க பொறுமை வேணும்..

7. அடுக்குமல்லி எடுத்துவந்து
படம்:ஆவாரம்பூ

எஸ்.பி.பி ,ஜானகி குரலில் சூப்பர் ரொமாண்டிக் பாட்டு..நம்ம காதல்தேசம் ஹீரோ வினித் நடிச்ச படம்..படத்த பாத்து உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுனா நான் பொறுப்பு இல்ல..

6..சொல்லாயோ சோலைக்கிளி
படம்: அல்லி அர்ஜுனா

நம்ம பாரதிராஜா பையன் மனோஜ் நடிச்ச படம்..இரண்டாம் பாதியாச்சும் பரவால்ல..முதல் பாதி படம் பாத்தாலே மூச்சு போயிடும்..ஆனாலும் சொர்ணலதாவின் சுகமான குரலில் மனம் வருடும் காதல் பாடல்..

5..குயிலுக்குப்பம் குயிலுக்கப்பம்

படம்: என் உயிர்த் தோழன்

இயக்குனர் பாரதிராஜாவின் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

பத்து நிமிடத்துக்கு மேல தைரியம் இருந்தா பாருங்க இந்தப் படத்த..ஆனா மலேசியா வாசுதேவன் சித்ராவின் வித்தியாசமான குரலில் சூப்பரான பாடல்

4. வருகிறாய் தொடுகிறாய்
படம்: அஆ

குஷி,வாலி போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த S.J. சூர்யாவின் படம்..ஒழுங்கா அந்த வேலைய மட்டும் பாக்காம உன்ன யார்ரா நடிக்கலனு கேட்டது என்று எல்லோரும் கூறிய படம்..அவன் மூஞ்ச மறந்துட்டு பாட்ட மட்டும் கண்ண மூடிட்டுக் கேட்டுப் பாருங்க ..ஹரிஹரன் சித்ரா செமையா பின்னிருப்பாங்க..

3..துளித்துளியாய்

படம்: பார்வை ஒன்றே போதுமே

குணால் மோனல் நடித்த படம்..படம் ஓடுச்சோ இல்லையோ பாட்டு சூப்பரா ஓடுச்சு..இசையமைப்பாளர் பரணியின் இசையில் சொர்னலதாவின் சுகமான கீதம்..

2.கூடமேல கூடவச்சு.
படம்: ரம்மி

விஜய் சேதுபதிக்கு மொக்கை வாங்கிய படம்..இமான் இசையில் பாட்டு மட்டும் சூப்பர்ஹிட்..வந்தனா சீனிவாசனின் வசீகரக் குரலில் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்..

1. திருடிய இதயத்தை
படம்: பார்வை ஒன்றே போதுமே.

மீண்டும் அந்த படம்..படம் வருடக்கணக்கில் ஓடிக் கேள்விப்பட்டிருப்போம்..ஆனால் வருடக்கணக்கில் ஓடிய பாடல் இந்தப் படத்தின் பாடல்கள்தான்..உன்னி, சித்ரா குரலில் உயிரை மயக்கும் பாடல்..எந்தப் பேருந்தில் ஏறினாலும் இந்தப்பாடல்தான் ஒலிக்கும் அந்தப் படம் வந்த காலகட்டத்தில்..பெரியண்ணா,சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு அந்த இசையமைப்பாளர் காணாமலே போய்விட்டார்..ஆனாலும் இந்த ஒரு பாடலால் இன்னும் இசையுலகை ஆளுகிறார்.

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்..

Sunday 28 May 2017

மருந்து உலகத்தின் மாயைகள்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவிவருகிறது..பிராண்டட் மருந்துகளை நாம் அதிகவிலை கொடுத்து வாங்கி ஏமாறுவதாகவும் ஜெனிரிக் மருந்துகள் நமக்கு மிகக்குறைந்த விலையில் வாங்கமுடியும் என்ற செய்திதான் அது..இதில் என்ன கொடுமை என்னவென்றால் ஜெனிரிக் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட அதை forward செய்வதுதான்..பல்வேறு குப்பை செய்திகள் தினமும் Whatsapp ல் வருகின்றன. தயவுசெய்து உங்களுக்கு என்னவென்றே தெரியாத செய்திகளை தேவையில்லாமல் பகிராதீர்கள்..

மருத்துவ உலகம் என்பது பல்வேறு மாயைகள் நிறைந்தது..தனி ஒருவன் படத்தில் காட்டுவதுபோல பல்வேறு திருட்டுத்தனங்கள் நிறைந்தது..உலகிலேயே அதிக மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது..ஒரு வருடத்திற்கு 3 லட்சம் கோடிக்கும் மேல் வர்த்தகம் நடக்கும் ஒரு மிகப்பெரிய துறை..எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் இந்தியாவில்தான் 80 சதவீதம் தயாராகின்றன.

மருந்து அட்டைகளில் மருந்துகளில் பெயரின் பக்கத்தில் IP, BP, USP என்று எழுதியிருப்பதைப் பார்த்துள்ளீர்களா?  அது Indian pharmacology,British pharmacology ,United states pharmacology என்ற அந்தந்த நாட்டு காப்புரிமையைக் குறிக்கும்..ஒரு நாடு காப்புரிமை பெற்ற மருந்தைத் தயாரிக்க அந்த நாட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துத்தான் நாம் மருந்தைத் தயாரிக்க முடியும்..அதன் பெயர்தான் பிராண்டட் மருந்துகள்..ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அந்த பிராண்ட் பெயரில் நாம் தயாரிக்க முடியும்..அதன் பிறகு அந்த மருந்து கம்பெணியால் அதே பெயரில் மருந்து தயாரிக்க முடியாது..ஆனால் அதே மருந்தை வேறு பெயரில் தரம் குறையாமல் தயாரிப்பதே ஜெனிரிக் மருந்து என்று அழைக்கப்படுகிறது..நாங்க எதும் மொள்ளமாரித் தனம்லாம் பன்னல..அதே qualityயோடதான தயாரிச்சுருக்கோம் சொல்வாங்க..அதை food and drug administration என்னும் அமைப்பு OK சொல்லிட்டா போதும்..அவர்கள் ஜெனிரிக் மருந்துகளைத் தயாரிக்கலாம்.
 நீங்கள் இன்டர்நெட்டில் தேடினாலும் ஜெனிரிக் மருந்துகளும் சிறந்தது என்றே காட்டும்..ஆனால் உண்மை அதுதானா என்றால் அங்கேதான் கொஞ்சம் கேள்விக்குறி..ஜெனிரிக் மருந்துகளால் நமக்கு லாபமோ இல்லையோ..மருந்துக்கடை காரர்களுக்கு கொள்ளை லாபம்..ஆம் ,பிராண்டட் மாத்திரை ஒரு அட்டை விற்றால் 5 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் அதே மருந்தை ஜெனிரிக் விற்றால் 20 ரூபாய் லாபம் கிடைக்கும்..நம்ம நாட்டு அதிகாரிகள பத்தி தெரியாதா?  பணம் கொடுத்தா எதுல வேணும்னா கையெழுத்து போடுவாங்க..ஒன்றரை வருடம் மெடிக்கல வேல செஞ்சதுக்கே இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்கன்..முழுசா தெரியாம ஜெனிரிக் மருந்துகளை நம்பி ஏமாறாதீர்கள்..இன்னும் கேவலமான quality ல தயாரிக்கிற ஒரு மருந்துகள் இருக்கின்றன.அதன் பெயர் commin medicines என்று கூறுகின்றனர்..கணக்கில் வராததை எல்லாம் சேர்த்தால் 5 லட்சம் கோடிக்கும் மேல் வியாபாரம் நடக்கும் சந்தை நம் இந்தியா..எளிமையாக ஏமாறுபவர்களும் நம் இந்தியர்கள்தான்...பிராண்டட், ஜெனிரிக் என்று குழப்பிக்கொள்வதை விட நோய் வராமல் ஜாக்கிரதையா பாத்துக்கோங்க உங்க உடம்ப.. பிராண்டட் மருந்துகளே ஒரு கம்பெணியைவிட வேறொரு கம்பெணியில் குறைந்த விலையில் கிடைக்கின்றன..அதை நம்பி வாங்கி சாப்பிடலாம்...CIMS என்ற புத்தகம் பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்கும்.அதில் அனைத்து கம்பெனிகளின் மருந்துகளும் விலையுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.. நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்...

Friday 19 May 2017

கால்கடுக்க நிற்பவர்களுக்கு கைகொடுப்போம்

உலகில் பலவிதமான வேலைகள் செய்பவர்களைத் தினந்தோறும் பார்க்கிறோம்..சில வேலைகள் எளிமையாகவும் சிலர் கடினமான வேலைகளைச் செய்துதான் மூன்று வேளை சாப்பிட வேண்டியிருக்கிறது...ரோடுபோடும் பணியாளர்களைப் பார்த்து பலமுறை வருந்தியிருக்கிறேன்..இன்று இப்பதிவில் நீண்டநேரம் நின்றுகொண்டே வேலைசெய்யும் பணியாளர்களையும் அவர்கள் படும் இன்னல்களையும் பற்றியுமே உங்களுடன் பகிர விரும்புகிறேன்..தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள், சலூன் ஊழியர்கள் போன்றோர் ஒருநாளைக்கு 8 மணி நேரம் நின்றபடியே வேலைசெய்யும் அவலம் இன்னமும் இருக்கிறது..அதனால் அதில் 25 சதவீதம் பேர் VERICOSE VEIN என்னும் நரம்புச் சுருட்டல் நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்..

அவர்கள் எந்த பாவமும் செய்து இவ்வாறு ஆகவில்லை..நீண்டநேரம் நிற்பதால் ரத்த ஓட்டம் மேலே செல்ல இயலாமல் கால் நரம்புகள் சுருட்டிக் கொள்கின்றன..இதை சாதாரண பிரச்சனையாக நினைக்க வேண்டாம்..வருடத்திற்கு 40 லட்சம் பேர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன..பத்து வருடமாக கம்பெனியில் நின்றுகொண்டே பணிபுரிவதால் என் அண்ணன் கூட இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்..நான் டிப்ளமோ படித்துவிட்டு ஒருவருடம் மெடிக்கலில் வேலைசெய்த போது எதிரில் இருந்த சலூன்கடை அண்ணன் ஞாயிற்றுக் கிழமைகளில் சாப்பிடக்கூட நேரமின்றி நீண்டநேரம் வேலைசெய்வதைப் பார்க்கும்போதுதான் அவர்கள் படும் கஷ்டத்தை உணரமுடிந்தது..அவர்கள் எளிமையாக சம்பாதிப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..

அதுக்காக எங்கள என்னடா பன்ன சொல்ற என்று நீங்கள் கேட்பது புரிகிறது..இப்பிரச்சனையை சமூக ஆர்வலர்களிடமும் அரசியல்வாதிகள் பார்வைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்..தனியார் நிறுவனங்களில் நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்வதைத் தடுக்க ஏதேனும் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். நாளை நாமும் பாதிக்கப்படலாம்..எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன..ஏன் நகரும் வகையில் உயரம் மாற்றும் வகையிலான நாற்காலிகள் உருவாக்க முடியாதா? அதிலுள்ள நிறைகுறைகளை விவாதிப்போம்..சலூன்கடை காரர் ஏன் அமர்ந்துகொண்டே முடிவெட்ட முடியாது? அடுத்த ஆண்டு அறிவியல் கண்காட்சியில் இதற்கான தீர்வாக ஏதேனும் காட்சிப்பொருள் உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..நண்பர்கள் யாரேனும் செய்தாலும் மகிழ்ச்சியே..வாழ்நாள் முழுதும் சிகிச்சை,அறுவைசிகிச்சை மூலம் கூட இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பதாலேயே இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளேன்.. முடிந்தவரை நண்பர்களுக்கு பகிருங்கள்.நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்.

Sunday 14 May 2017

அட்டகாசமான அஜித் பாடல்கள்

இசைப்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு..நம்ம தல அஜித் பிறந்தநாள் பதிவாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..அஜித் ரசிகர்களுக்கு இம்மாதம் முழுவதுமே தல பிறந்தநாள்தான்..நான் முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் தீவிர ரசிகனெல்லாம் இல்லை..ஆனால் அஜித் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது வீரம் படத்திற்குப் பிறகுதான்..

இப்பதிவில் அஜித்தின் டாப் 10 பாடல்களை வரிசைப்படுத்தியுள்ளேன்..அஜுத் ரசிகர்கள் பலரே அவரது படத்தில் பாடல்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்று நினைக்கின்றனர்..அது ஒரு மாயை..உண்மையில் அஜித் படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் பத்து மட்டும் பட்டியலிட்டுள்ளேன்..

1..தாஜ்மகால் தேவையில்லை,..
படம் : அமராவதி
அஜித்தின் முதல் படம். படம் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் இன்றளவும் நெஞ்சைவிட்டு நீங்கா பாடல்..SPB, ஜானகி குரலில் மனதை வருடும் அருமையான பாடல்..

2. புத்தம்புது மலரே
படம்: அமராவதி.
 ஒரே படத்தில் இரண்டு பாடல் வேண்டாம் என்று நினைத்தேன்..ஆனால் இந்த பாடல் இல்லாமல் இப்பதிவு நிறைவடையாது..தினம் தினம் கேட்டாலும் மனம் மனம் ரசிக்கும் பாடல் ..

3.நலம் நலம் அறிய ஆவல்
படம்:காதல் கோட்டை
அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையான படம். இயக்குநர் அகத்தியனுக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்த படம்..தேவாவின் இசையில் அனைத்து பாடல்களுமே ஹிட்..ஆனால் இந்தப் பாடல் கொஞ்சம் ஈர்ப்பு அதிகம்..
4. மீனம்மா
 படம்: ஆசை.
அஜித்தின் மற்றுமொரு மாபெரும் வெற்றிப்படம்..சொக்கவைக்கும் சொர்ணலதா ,உன்னி குரலில் கிரங்கடிக்கும் கீதம்.
5. உனைப்பார்த்த பின்புநான்
படம்: காதல் மன்னன்
 அஜித், இயக்குனர் சரண் combo வில் முதல் படம்..பரத்வாஜ் இசையில் நம்ம SPB உயிரக் கொடுத்துப் பாடியிருப்பார்..

6. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.
படம்: அமர்க்களம்.
 தல யின் 25 ஆவது படம்.. அஜித் -சரண் இணைந்த இரண்டாவது படம்..SPB மூச்சு விடாமல் பாடிய சாதனை பாடல்..நம்ம தல ஷாலினியை இணைத்த படம்..

 6. சந்தனத் தென்றலை
 படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

அஜித்திற்கு பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் ஏ.ஆர் ரகுமான் இசையில் சங்கர் மகாதேவன் பாடிய இந்த பாடலுக்கு தேசிய விருது தேடிவந்தது..
7. சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்
படம்: தீனா
 இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் முதல் படம்..ஹரிஹரனின் சிறந்த 10 பாடல்கள் தேர்ந்தெடுத்தால் அதில் நிச்சயம் இப்பாடலும் இடம்பெறும்..தல என்ற பட்டப்பெயரைக் கொடுத்த படம்..

8. அக்கம் பக்கம் யாருமில்லா.
 படம்: கிரீடம்.

படம் வெற்றியடையாவிட்டாலும் பாடல்கள் சூப்பர்ஹிட்டான படம்..ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு இந்த ஒரு பாடல் போதும்..இரவில் கேட்டால் இதயம் வருடும்..

9.காற்றில் ஓர் வார்த்தை
 படம்: வரலாறு

 மூன்று தோற்றத்தில் தோன்றி வரலாறு படைத்த படம்..SPB .சாதனா சாகம் குரலில் மனம் வருடும் மற்றுமொரு பாடல்..
10. ஆலுமா டோலுமா.
படம்: வேதாளம்.

 இப்பாடல் பட்டியலில் இடம் பிடிக்க முக்கிய காரணம்..தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் dance show களில் இந்த பாடல் இடம்பெறாமல் சத்தியமாய் இருக்க முடியாது..அனிருத்தின் இசையில் அனைவரையும் ஆடவைத்த பாடல்..படம் வருவதற்கு முன்பே இந்த பாடல் வந்து செக்க போடு போட்டாலும் அஜித்திற்கு இதுபோன்ற பாடல் செட்டாகுமா என்றொரு சந்தேகம் எனக்குள் இருந்தது..ஆனால் படம் பார்த்தபிறகு அஜித்திற்கு மட்டுமே இப்பாடல் செட்டாகும் என்று புரிந்தது..

தூக்கம் வந்துடுச்சு..அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்..

Thursday 27 April 2017

பெண்ணியம் பேசலமா கொஞ்சம்?

சமீபத்தில் ஆசிரியர்களின் வாசகர் வட்டத்தில் நடைபெற்ற வாசிப்பு முகாமில் பெண்மை என்றொரு கற்பிதம் என்ற புத்தக விமர்சனம் நடந்தேறியது..அதில் அனைவருமே ஆண் சமூகம் முழுக்க குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டனர்..என்னுடைய கருத்துக்களைக் கூறலாம் என்று நினைத்தேன்..ஆனால் என்னைப் பெண்ணியத்திற்கு எதிரானவன் என்று நினைத்து விடுவார்கள் என்றுதான் பேசவில்லை..

எந்தவொரு மாற்றமும் ஒரே நாளில் நிகழ்ந்து விட முடியாது..நிச்சயம் ஒருநாள் சமத்துவ சமுதாயம் உருவாகும்..
அதற்குமுன் அனைத்து ஆண்களையும் ஆணாதிக்கவாதிகளாக பார்க்கும் பெண்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறேன்..
1. எத்தனை பெண்கள் உங்கள் கணவரின் சொத்தில் சரிபாதி பங்கை உங்கள் நாத்தனாருக்கு எழுதிக் கொடுக்க முழுமனதுடன் சம்மதிப்பீர்கள்.?.
2.எத்தனை பெண்கள் உங்கள் ஏழு வயது மகனுக்கு கோலம் போட கற்றுக் கொடுத்துள்ளீர்கள்..?
3.எத்தனை பெண்கள் உங்கள் தம்பி வீட்டுக்கு செல்லும்போது உங்கள் நாத்தனாரை உட்கார வைத்துவிட்டு உங்கள் தம்பி வீட்டுவேலை செய்வதை ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள்.?
4.உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு தீபாவளிக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்.?
5.எத்தனை பெண்கள் உங்கள் மகனுக்கு குணத்தில் மட்டும் அழகான பெண்ணை மணம் முடிக்க தயாராய் இருக்கிறீர்கள்?
6..இன்னும் பல கேள்விகள் மனதினுள்ளே...மொபைலில் அதிகம் எழுதமுடியவில்லை..நான் பெண்ணியத்திற்கு எதிரானவன் அல்ல..ஆண்கள் மட்டும் அவ்வாறு வளர்க்கப்படவில்லை..பெண்களும் இந்த சமூகத்தில் அவ்வாறுதான் வளர்க்கப்பட்டுள்ளனர்..
ஆண்களை எதிரிகளாக பார்ப்பதை விட்டுவிட்டு அடுத்த தலைமுறை குழந்தைகளை சரிசமமாக வளர்க்க முயல்வோம்..முடிந்தால் சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்குங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கு..நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்ற எதிர்பார்ப்புகளோடு உங்கள் கலியபெருமாள்..

Thursday 13 April 2017

இந்திய மாநிலங்களின் பெயர்கள் கற்பித்தல்-சிறுமுயற்சி

பதிவுலகம் பக்கம் தலைகாட்டி பலமாதங்கள் ஆகிவிட்டன..கழுத்துவலி மற்றும் பணிச்சுமையால் எழுதமுடிவதில்லை..என் வகுப்பறை அனுபவத்தைப் பகிரவே இப்பதிவு..இந்திய மாநிலங்களின் பெயர்களைக் கற்பிக்க முயன்றேன் இரண்டு வாரங்களுக்கு முன்..நமக்குத் தெரியும் என்பதால் மாணவர்களும் இரண்டு நாட்களில் கற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து ஏமாந்து போனேன்..மாநிலங்களில் பெயர்களை உச்சரிக்கவே மிகவும் சிரமப்பட்டனர்..என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் எனக்குத் தெரிந்த ஒரேவித்தை பாடலைத் தேர்ந்தெடுத்தேன்..அதில் வெற்றியும் அடைந்துவிட்டேன்..இப்பொழுது இந்திய வரைபடத்தில் எந்த மாநிலத்தின் பெயரைக் கூறினாலும் சரியாகக் காட்டிவிடுகின்றனர் நொடிப்பொழுதில்..உங்கள் ஆசிரிய நண்பர்களுக்குப் பகிருங்கள்..என்னுடைய இந்த சிறுமுயற்சி யாருக்கேனும் பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி..மாநிலங்களின் தலைநகரோடு பாடலாகக் கூற முயற்சிக்கிறேன் விரைவில். நன்றிகளுடன் உங்கள் கலியபெருமாள்...https://youtu.be/bN6YKe4arec