Saturday 20 January 2018

போக்குவரத்து விதிகளை மீறும் பொ...போக்குகள்..

தலைப்புக்காக நண்பர்கள் முதலில் மன்னிக்கவும்..போக்குவரத்து விதிகளை மதிக்காத பண்ணாடைகளுக்கு இந்த மரியாதையே அதிகம்
என்று நினைக்கிறேன்..அதனால்தான் இந்தத் தலைப்பு..யாருக்கும் அறிவுரை கூறி திருத்துவதற்காக இப்பதிவு எழுதப்படவில்லை...எத்தனையோ திரைப்படங்களில் காட்டுகின்றனர்; தினம்தினம் செய்தித்தாள்களில் எத்தனையோ விபத்துச் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன...ஆனால் எவனும் இங்கே திருந்திய பாடில்லை..(ஒருசிலரைத் தவிர., அதுவும் திருமணமாகி குழந்தைகள் பிறந்தபிறகு) ..மனதில் இருக்கும் கோபத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கவே இப்பதிவு..

ஒவ்வொரு நாளும் வெளியில் செல்லும்போது இப்போதெல்லாம் திரும்பி உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் செல்லவேண்டி இருக்கிறது..அதுவும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிரைப் பிடித்துக் கொண்டுதான் செல்லவேண்டியிருக்கிறது ஒவ்வொரு நொடியும்.

புதுச்சேரியில் வாகனம் ஓட்ட இரண்டு கண்கள் போதாது..குறைந்தது ஆறு கண்களாவது வேண்டும்..இடது பக்கத்தில் ஏறிவரும் எருமைகளைப் பார்ப்பதா? சந்திலிருந்து சரக்கென்று உள்ளே புகும் சனியன்களைப் பார்ப்பதா? விதிகளை மதிக்காதவர்கள் என் தேசத்தில் திறமைசாலிகள்..எல்லாவற்றையும் ஏற்று நடப்பவர்கள் இங்கே ஏமாளிகள்...

இப்போதெல்லாம் நகரத்திற்கு சென்றுவந்தாலே மன உளைச்சலோடுதான் வீட்டுக்கு வரவேண்டியிருக்கு..போக்குவரத்து நெரிசல் பழகிவிட்டது..போக்குவரத்து விதிமீறல்களைப் பார்த்தே மன உளைச்சல் அதிகமாகிறது..எவன் எப்படி போனால் நமக்கென்ன என்று செல்ல முடியவில்லை..ஏனென்றால் அந்த பண்ணாடைகளால் அதிகம் பாதிக்கப்படுவது  ஒழுங்காகச் செல்லும் நாம்தான்..சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் பாதிப்பேர் ஒழுங்காக ஓட்டிவந்தவர்கள்தான்..அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

கற்பனையில் மட்டுமே அந்நியன் ஆகமுடிகிறது நம்மால் ..One way ல் செல்லும்போது எதிர்த்திசையில் எழுபது கிலோமீட்டர் வேகத்தில் எருமைகளைப் பார்க்கும்போது செருப்பாலடிக்கத் தோன்றும்...உண்மையில் நாம்தான் தவறாகச் செல்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்கு வேகமாக வருகிறார்கள்..

என் தேசத்தில்தான் சட்டம் எதுவும் செய்யாதே..அப்புறம் எப்படி பயப்படுவான்..போலீஸ் புடிச்சாலும் வட்டம், மாவட்டம்னு எவனாச்சும் போன் பண்ணுவான்..இதுதான் ஜனநாயக நாடாச்சே..

எதுனா ஒன்னுன்னா சிங்கப்பூர உதாரணமா சொல்றானுங்க..ஆனால் அது சர்வாதிகார சட்டங்கள் கொண்ட நாடென்பது எவனும் அறிவதில்லை..சட்டங்களும் தண்டனைகளையும் கடுமையாக்காமல் இவனுங்கள திருத்தவே முடியாது..மனுநீதிச்சோழன்கள்தான் தேவை இங்கே என் தேசத்திற்கு.. காந்தியே மறுபிறவி எடுத்து வந்தாலும் சிக்னலை மதிக்காதவனையும் தாறுமாறாய் ஓட்டும் தறுதலைகளையும் ரயில்வே கிராசிங்கில் வழியை அடைத்து நிற்கும் ரவுடிகளையும் பார்த்தால் அகிம்சையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆயுதமே கையில் எடுப்பார்..

எட்டாம் வகுப்பு படிக்கும் பன்றிகள் கூட Enfield ஓட்டுகிறது...யாரை செருப்பால் அடிப்பது இங்கே..ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கூறிக்கொண்டு ஒரு பெண் செல்போனை காதில் வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிச் சென்ற கொடுமையை நேற்று கண்டேன்..வாழ்க பெண் சுதந்திரம்!?   நீங்க யாரும் இல்லாத ரோட்டுல போய் எப்படியாவது ஓட்டி நாசமா போங்கடா...ஒழுங்கா போறவன் உயிர வாங்காதீங்கடா..சத்தியமா இதப்படிச்சு எவனும் திருந்த மாட்டானு தெரியும்...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்...

Thursday 4 January 2018

கந்துவட்டி தற்கொலைகளுக்கு யார் காரணம்?

2017 ஆம் ஆண்டு ஒருவழியாக பல பிரச்சினைகளைப் பார்த்துவிட்டது முடிந்துவிட்டது..சென்ற வருடம் பார்த்த பல்வேறு பிரச்சனைகளுள் ஒன்று கந்துவட்டி  தற்கொலை பிரச்சனை..வருடத்தின் இறுதி நாளில் கூட செய்தித்தாளில் ஒரு தற்கொலை செய்தி கந்துவட்டி பிரச்சனையால் கண்கலங்க வைத்தது..கந்துவட்டி என்ற பெயரில் வட்டிக்குவிடும் பெரியமனிதர்கள் போர்வையில் திரியும் ரௌடிகள் மட்டும்தான் இதற்குக் காரணமா? அவர்களை எல்லோரையும் ஒரே நாளில் இல்லாமல் போகச்செய்து விடமுடியுமா?  அரசாங்கம் நினைத்தால் ஒரே நாளில் ஒழித்துவிட முடியுமா? என்றால் முடியாது என்பதுதான் உடனடி பதில்...

ரஜினி சொல்வது போல இங்கே சிஸ்டமே கெட்டுப் போயிருக்கு..அவற்றை எல்லாம் ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை இல்லாமல் மாற்ற முடியாது...மாறவேண்டியது உண்மையில் பொதுமக்களாகிய நாமும்தான்...மக்களின் பேராசையால்தான் கந்துவட்டி தொழில் தெருவுக்கு தெரு கொடிகட்டி பறக்கிறது..

இருப்பதைக் கொண்டு யாரும் திருப்தி அடைவதில்லை..ஒரே நாளில் எல்லோருக்கும் அம்பானி ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது..அம்பானி கூட படிப்படியாகக் கஷ்டப்பட்டு முன்னேறியவர்தான் என்பதை மறந்துவிட்டு...

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் கடன் வாங்க..சிலர் சொந்தவீடு கட்டவும்,சிலர் தொழில் தொடங்கவும்,சிலர் பெண்ணின் திருமணச்செலவுகளுக்கும், சிலர் அவசர மருத்துவச் செலவுக்கும், சிலர் ஏன் வாங்குகிறோம் என்றே தெரியாமல் வாங்குகின்றனர்..தங்கள் தகுதியை மீறி.. பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் கடன் வாங்கறதும் தப்பு. கடன் கொடுக்கறதும் தப்பு என்ற வசனம் கேட்பதற்கு ரொம்ப சாதாரணமாகத் தோன்றினாலும் ஆழமாக யோசித்தால் அதன் அர்த்தம் புரிகிறது...

சிலர் எந்த ஒரு பயிற்சியும் முன்னறிவும் இல்லாமலே இருக்கும் வீட்டை அடகுவைத்து தொழில் தொடங்குகின்றனர்...நஷ்டமானால் என்ன ஆகும் என்று எதிர்மறையாகவும் சிலநேரங்களில் சிந்திக்கவேண்டும்..

பலருக்கு வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற பண்பாடு,தொழில் ரகசியம் கூட தெரிவதில்லை..கடனை வாங்கி கடை வைத்து என்ன பயன்..நானே சில கடைகளுக்குச் செல்லும்போது ஏன்டா இந்தக் கடைக்கு வந்தோம் என்று யோசித்திருக்கிறேன்... சிலர் சிடுமூஞ்சிகளாக இருப்பார்கள்..வாடிக்கையாளரின் மனதைக் கொஞ்சமாவது குளிரவைக்கும் ரகசியம் தெரியவேண்டும்...

அப்படியே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் கௌரவம் பார்க்காமல் இருப்பதைக் கொண்டு கடனை அடைத்துவிட்டு ஏழையாக வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ்வதில் தவறில்லை...தற்கொலை ஒன்று மட்டுமே தீர்வல்ல ...வாழ நினைத்தால் வாழலாம்...

ஆனால் பல பணக்காரர்களும் கடன்சுமை அதிகமானாலும் தங்கள் சொகுசு வாழ்க்கையிலிருந்து ஒருபடி கூட இறங்கிவர நினைப்பதில்லை..எது கௌரவம், எது வெட்டி கௌரவம் என்று அறிவதில்லை...

நான் நேரடியாகவே பலரைப் பார்த்திருக்கிறேன்..கடன்காரன் கழுத்தை நெரிக்கும்போது கூட தங்கள் உணவுப் பழக்கம், உடை, வெட்டி செலவுகள் எதையும் குறைத்துக்கொள்வதில்லை...கடன் தொல்லை இருக்கும்போது கூட பியூட்டி பார்லருக்கு பத்தாயிரம் செலவு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன்...

இவர்களை யார் திருத்துவது...கடைசியில் கடன் அதிகமாகி விட்டது என்று தற்கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபம்? கந்துவட்டி காரர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்...அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை விட நாமும் மாறவேண்டும்...கந்துவட்டிக் காரர்களுக்கு நான் ஒன்றும் ஆதரவாகப் பேசவில்லை...இந்தக் காலத்தில் கடன் வாங்காமல் வாழ்வதென்பது கொஞ்சம் கஷ்டம்தான்...ஆனால் விரலுக்கேத்த வீக்கத்தோடு வாழப் பழகினால் பல உயி்ர்ப் பலிகளைத் தடுத்திடலாம்...நன்றி..