Sunday 23 November 2014

வரம் தந்த சாமிக்கு

   நீண்ட நாள்களுக்குப் பிறகு பதிவுலகம் பக்கம் தலைகாட்டுகிறேன்...நாள்கழித்து வந்தாலும் புதுதெம்போடு புத்துணர்ச்சியோடு உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி...ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்...இதற்கு மேலும் சஸ்பென்ஸ் சரியல்ல....மூன்று நாட்களுக்கு முன்னர் (20.11.2014) என் மனைவி ஒரு அழகான பெண்குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறாள்...

   ஒருநாள் இரண்டுநாள் அல்ல நான்கு ஆண்டுகள் காத்திருக்க வைத்தாலும் நாங்கள் ஆசைப்பட்டபடி பெண்குழந்தை பிறந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி..ஆண்டவன் நல்லவர்களைச் சோதித்தாலும் கைவிடுவதில்லை என்ற வரிகளை நினைத்து  மகிழ்ச்சியில் இருக்கிறேன்....

இத்தனைக்கும்  ஒரு வருடத்திற்கு முன்னரே பெயரெல்லாம் கூட முடிவு செய்துவிட்டோம் பெண் குழந்தைதான் பிறக்கும் என்ற நம்பிக்கையில்...என் உடன்பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள்...அண்ணன்கள் இரண்டு பேருக்கும் ஆண்குழந்தைகளே...அதனால்தான் பெண்குழந்தை மேல் அவ்வளவு பிரியம்...கருவில் உருவான போதே அவளுக்கு ஷிவானி என்று பெயர் சூட்டிவிட்டோம்...

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்ததால் ரா, ரே, ரோ போன்ற எழுத்தில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்...ஷிவானி என்ற பெயர் எங்களுடனே பத்து மாதங்களாக வாழ்ந்துவிட்டது...திடீரென்று அந்த பெயரை மாற்றிவிட்டு வேறொரு பெயரைச்சூட்ட மனம் ஏற்கவில்லை...எனவே ராகஷிவானி  என்று பெயர் வைத்திருக்கிறேன்...

இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு...மூன்று நாட்களாக மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்ததால் அன்றே பதிவிட முடியவில்லை.....

இன்று நான் மகிழ்சியாக இருந்தாலும்  குழந்தை பாக்கியம் இல்லாத என்னுடைய மனக்கஷ்டங்களை பல நேரங்களில் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்...அப்போதெல்லாம் எனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டிய பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இப்பதிவைக் காணிக்கையாக்கி அவர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.....

எல்லாருக்கும் நல்ல காலமுண்டு நேரமுண்டு வாழ்விலே என்ற மறுபடியும் பட பாடல் பின்புலத்தில் ஒலிக்கிறது.....நன்றி...அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...(மனைவி மூனு மாசத்துக்கு அம்மா வீட்ல இருப்பாங்க இல்ல அந்த நம்பிக்கைதான்....குழந்தையோடு கொஞ்சவே நேரம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...முடிந்தவரை பதிவுலகம் பக்கம் வர முயற்சிக்கிறேன்...தயவுசெய்து வந்துடாத என்று நீங்கள் சொல்வது என் காதுகளில் கேட்கிறது.......)