Saturday 24 February 2018

கருப்பாய் பிறந்தவர்களுக்கும் கொஞ்சம் கரிசனம் காட்டுங்கள்.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்... எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ? என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி எழுதிவிட்டுச் சென்றுவிட்டார்..ஆனால் இன்னமும் இங்கே நிறத்தை வைத்துத்தான் பல இடங்களில் தரம் நிர்ணயிக்கப்படுகிறது..

இது ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சனையாக இல்லை..என் தேசத்தில் மட்டுமல்ல இது ஒரு சர்வதேச பிரச்சனை..

கல்வி மட்டும் போதாது போல இங்கே கலரும்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது..விலங்குகளும் இதற்கு விதிவிலக்கல்ல போல..பசுமாட்டைத்தானே எல்லோரும் பக்தியோடு வழிபடுகிறோம்..கருப்பாய் இருக்கும் எருமைமாட்டை என்னவோ எம வாகனமாகத்தானே சொல்லிவைத்திருக்கிறார்கள்..நாட்டில்தான் இந்நிலை என்றால் காட்டிலும் இதே கதிதான் போல..சிவப்பாய் இருக்கும் சிங்கத்திற்குத்தான் காட்டரசன் பதவி..கம்பீரமாய் இருந்தாலும் கருப்பாய் போனதால் யானைக்கு அடுத்த இடம்தான்..

ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு காட்சி வரும் ..அங்கவை சங்கவை நகைச்சுவைக் காட்சி..பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் கருப்பாய் பிறந்த பெண்களின் மனவலியை ஏன் சூப்பர்ஸ்டார் உணராமல் போனார் என்று தெரியவில்லை..பல சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்..இந்தியாவில் கருப்பான பெண்களே இல்லாதது போல கருப்பான வேடத்திற்குக் கூட செக்கச்செவேல் என்றிருக்கும் நடிகைகள்தான் தேவைப்படுகிறார்கள்..பாலாவின் பரதேசி படத்தில் கூட மைதாமாவு போலிருக்கும் வேதிகாவிற்கு கரிபூசி நடிக்க வைத்திருப்பார்..

இந்தியாவைப் பொறுத்தவரை சிவப்பானவர்களே சிறந்தவர்கள்,திறமைசாலிகள்..கருப்பாய் பிறந்தவர்கள் எல்லாம் களவாணிகள்,அறிவற்றவர்கள்..இது பொதுவான கண்ணோட்டம் என்றுதான் கூறுகிறேன்..எல்லோரும் அப்படி எல்லா நேரத்திலும் நினைத்திருந்தால் தமிழ்நாட்டிற்கு ஒரு கர்மவீரர் கிடைத்திருக்க மாட்டார்..

இந்த நிறவேறுபாட்டால் கருப்பாய் பிறந்தவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் பற்றியும் .தாழ்வு மனப்பான்மையால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பற்றிதான் இப்பதிவில் எழுத நினைத்தேன்..

நானே சிறுவயதில் நிறைய தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்..எனக்குக் கிடைத்த சில நல்ல ஆசிரியர்களின் ஊக்கத்தால் எப்படியோ நன்றாகப் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு வந்துவிட்டேன்..வேலைக்கு வந்தபிறகுகூட வாடகைக்கு வீடுகேட்டுச் சென்றால்  வீட்டு ஓனர்கள் என்னைக் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள் திருடனாய் இருப்பானோ என்று..

நம்ம ஊர்ல ஒன்னு சொல்வாங்க..ஆம்பபுள்ள எப்படி இருந்தாலும் பரவாயில்ல.பொம்பளபுள்ளதான் கருப்பா பொறந்துட கூடாதுன்னு..அவர்களுக்கு என்ன ஆசையா கருப்பாகப் பிறக்க..என்னதான் சமூகம் முன்னேறினாலும் படித்தாலும் கருப்பாய் பிறந்த எத்தனையோ பெண்கள் இன்னும் நிறையபேர் முதிர்கன்னிகளாகத்தான் இருக்கிறார்கள்..காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்..ஆனால் அதில்கூட சிவப்பாய் இருக்கும் பெண்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது..கருப்பாய் இருப்பவர்களுக்குக் காத்திருப்போர் பட்டியலே நீள்கிறது..  கருப்பாய் பிறந்த பெண்களைக் கல்யாணம் செய்தால் கவர்மென்ட் வேலையில் முன்னுரிமை என்று கூறிப்பாருங்கள்..முதிர்கன்னிகளே யாரும் இருக்கமாட்டார்கள்..

இந்த அவலமெல்லாம் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நானும் அறிவேன்..எனக்கு நெருக்கமான ஒருவருக்கு இரண்டு மகன்கள்..சிவப்பாய் இருப்பவனை தவறே செய்தால்கூட தண்டிக்க மாட்டார்கள்..கருப்பாய் இருப்பவனையே எப்போதும் எல்லாவற்றுக்கும் திட்டித் தீர்ப்பார்கள்..இந்தப் பதிவைப் படித்தாலாவது ஒரு நான்கு பேராவது மாறிவிடமாட்டார்களா ் என்ற நப்பாசையில்தாற் இப்பதிவை எழுதுகிறேன்.. அன்புள்ள அம்மாக்களே உங்கள் மகனுக்குப் பெண்பார்க்கும்போது குணத்தில் அழகான பெண்ணையும் கொஞ்சம் பாருங்கள்..

பணிக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகளில் நிறவேறுபாடு பார்க்காமல் நடுநிலையோடு நடந்துகொண்டேனா என்று என்னிடம் மனசாட்சியைத் தொட்டுக் கூறச்சொன்னால் ,சரியாக ஞாபகம் இல்லை கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன் என்றுதான் கூறத் தோன்றுகிறது..நாமும் மனிதர்கள்தானே..சிவப்பாய் இருக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்தவர்கள் என்று பலநேரங்களில் நினைத்ததுண்டு.. ஆசிரியர்களே, பெற்றோர்களே உங்களால்தான் இந்நிலை மாறமுடியும் ..உங்களிடம் படிக்கும் குழந்தைகளை நிறத்தால் மதிப்பிடாதீர்கள்..கருப்பாய் இருக்கும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்..அவர்களுக்கு அன்பையும் தன்னம்பிக்கையையும் அள்ளிக்கொடுங்கள்..நிறவேறுபாடு நீங்கி நிம்மதியான உலகம் தோன்றட்டும்.. சொல்லவந்ததை முழுதாகச் சொன்னேனா என்று தெரியவில்லை..விடுபட்ட கருத்துக்களை விவாதிப்போம்..நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்..

Sunday 18 February 2018

அரசாங்கத்திலும் கட்டணக்கொள்ளையா!!?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வேதுறை என்பது அனைவரும் அறிந்ததே..சாமாணிய மக்களின் தொலைதூரப் பயணத்திற்கு உதவும் ஆபத்பாண்டவன் ரயில்வண்டிதான்..அப்படி ஒரு மரியாதை நேற்று வரை இருந்தது..ஆனால் இன்று கோபம் வருகிறது...இவனுக்கு வேற வேலையே இல்ல போல..நாட்டுல எவ்ளோ நல்ல விஷயம் நடக்குது..அதலாம் விட்டுட்டு எங்கெங்க என்னென்ன குறையுதுனு பாக்கறதுதான் உன் வேலையா என்பது காதில் விழுகிறது..நாம எப்படியோ யார் செஞ்ச புண்ணியத்துலயோ ஒரு அரசாங்க வேலைக்கு வந்துட்டோம்..ஆனால் இன்றைய காலகட்டம் அப்படியல்ல...ஆயிரம் பேர் தேவைப்படுற வேலைக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பிக்கறாங்க..இன்றைய வேலைவாய்ப்பு என்பது ஓட்டப்பந்தயமாக இல்லை..மாரத்தான் ஓட்டமாகி விட்டது...அதிலும் ஓட திறமையான ஒரு ஏழை இளைஞன் வந்தால் அவனிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டால் அவன் என்ன செய்வான்..?

இப்படித்தான் உள்ளது இன்றைய அரசின் கொள்கை..சமீபத்தில் ரயில்வே துறையில் வந்த வேலைவாய்ப்புச் செய்தியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்...ஒரே சமயத்தில் இரண்டு notification..அதுவும் 89000 பேருக்கு வேலைவாய்ப்பு..ஆஹா அருமையான அரசு..மக்களின் மீது எவ்வளவு அக்கறை என்று பார்த்தால் வச்சாங்க பாரு ஆப்பு..ஒவ்வொரு தேர்விற்கும் 500 ரூபாய் தேர்வுக்கட்டணமாம்..இரண்டு வேலைகளுக்கும் விண்ணப்பிக்க 1000 ரூபாய் செலுத்த வேண்டுமாம்..என்ன ஒரு வியாபார யுக்தி..எப்படியும் பத்தாயிரம் கோடி தேறும் தேர்வுக்கட்டணம்..வங்கி மோசடிகளை சமாளிக்க தேவைப்படலாம்..நான் எந்த கட்சிக்கும் எதிரானவன் அல்ல..சாமாணிய மக்களின் வயிற்றில் இப்படியா அடிப்பது? ஏற்கனவே இதைப்பற்றி ஏழைகள்தான் ஏமாந்தவர்களா? என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறேன்..

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுசெய்து விட்டால் பரவாயில்லையாம்..அந்தத் தவறைத் திருத்திக்கொள்ள இன்னும் ஒரு 250 ரூபாய் கட்டினால் போதுமாம்..தேர்வு எழுதும் ஏழை மாணவர்கள் மீது என்ன ஒரு பாசம் அரசிற்கு..இதை பகல்கொள்ளை என்று சொல்வதா அல்லது கடல்கொள்ளை என்று சொல்வதா தெரியவில்லை..எப்படியாவது இந்தத் தேர்விலாவது கஷ்டப்பட்டு எழுதி ஒரு வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை..அவர்கள் கனவில் மண் அள்ளிப்போடவா அரசாங்கம்..எத்தனை கோடி இலவசங்கள்,எத்தனை கோடி தள்ளுபடிகள் ?  ஆனால் உங்கள் அரசு வேலைத் தேர்வுக்கு ஏழை மாணவர்களிடம் சுரண்டுவது எந்த வகையில் நியாயம்?

தேர்வுக்கட்டணம் 200 ரூபாய் வைத்தால் கூட பரவாயில்லை..500 ரூபாய் என்பது நடுத்தர குடும்பத்தினருக்கே கொஞ்சம் அதிகமான தொகைதான்..ஒவ்வொரு போட்டித்தேர்வுக்கும் 500,, 1000 கட்டணம் கட்ட பயந்தே பல பேர் விண்ணப்பிப்பதே இல்லை..நல்லதோர் வீணை செய்தே பாடல்தான் நினைவில் வருகிறது..எத்தனையோ திறமைசாலிகள் இத்தகைய பிரச்சனையால் வேலையின்றி திரிகின்றனர்..இதை உடனடியாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல அதிகமாகப் பகிருங்கள்..விரைவில் விடியட்டும் ஏழைகளின் வாழ்வு?

முதல்ல வேலை கொடுங்க..அப்பறம் 500 என்ன 5000 கூட கட்டுகிறோம் என்ற ஏழைகளின் குரலாய் உங்கள் கலியபெருமாள்...

Sunday 11 February 2018

பகுத்தறிவை ஏற்போம்..கொஞ்சம் பாரம்பரியமும் காப்போம்..

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பார்கள்..அதுபோலத்தான் நம் முன்னோர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் விரல் நுனியில் பிடித்துக் கொண்டிருக்கும் சிலரால்தான் இன்னமும் என் தேசம் அழியாமல் இருக்கிறது..


இயற்கையைத்தான் நம் முன்னோர்கள் கடவுளாக வணங்கி வந்தார்கள்..கடல்,மலை,மழை,சூரியன், சந்திரன்,கோள்கள் என அனைத்தையும் கடவுளாக வழிபட்டனர்..அதுவரை மனிதன் நல்லவனாகவும் இயற்கையை நேசித்தும் வந்தான்..ஆனால் இயற்கை வேறு, கடவுள் வேறு என்று எண்ண ஆரம்பித்த நாளில் மனித இனத்தின் அழிவு துவங்கியது..உலகில் கடவுள் இல்லை என்று பகுத்தறிவு பேசத்தொடங்கிய நாளில்  நம் பாரம்பரியமும் ஒவ்வொன்றாக காணாமல் போகத்துவங்கியது..

பகுத்தறிவாளர்கள் யாரும் உடனே சண்டைக்கு வந்துவிடாதீர்கள்..நான் பகுத்தறிவுக்கு எதிரானவன் அல்ல...சந்தேகம் இருந்தால் தலைப்பைப் படிக்கவும்..

நான்கு எழுத்து படித்துவிட்டோம் என்ற மமதையில் நம் பெற்றோர் எந்த பழக்கம் சொன்னாலும் அதில் குற்றம்குறை கூறி அவர்களைப் படிக்காத முண்டங்கள் என்று கேலி செய்தோம்..ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் எல்லாம் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது..நானும் கூட என் தாத்தா பாட்டியை நக்கலடித்திருக்கிறேன் பட்டிக்காடுகள் என்று..

இன்று நமக்கு அறிவுரை கூற மூத்தோர்களும் யாரும் நம் வீட்டில் இல்லை..இயற்கையும் இங்கே இல்லை..சாப்பிடும் இலைகூட செயற்கையில் வந்துவிட்டது...

செயற்கைக்கோள் எல்லாம் விட்டு செவ்வாய்க் கோளை சிவப்புக்கோள் என்று சமீபத்தில் கூறியவன் அமெரிக்காகாரன்..ஆனால் பெயரிலேயே செவ் வாய் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அழைத்தவன் தமிழன்.

தாலிக்கயிறையே இன்று சிலர் அசிங்கமாக நினைக்கிறார்கள்..ஆனால் தாலிக்கயிறில் மஞ்சள்பூசி குளித்தால் மார்பகப்புற்றுநோய் வராது என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால்தான் நாம் கேட்போம்..குழந்தைகளைப் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்று நம் தாத்தாக்கள் கூறுவார்கள்..இன்று கேமராவின் ஒளிக்கதிர்கள் குழந்தைகளின் கண்பார்வையையும் மூளை நரம்புகளையும் பாதிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்..

வீட்டிற்குள் நகம் வெட்டவேண்டாம் என்றது, தொப்புள்கொடி தாயத்து கட்டுவது, கோபுர கலசங்கள் அமைத்தது, விரதங்கள் மேற்கொண்டது, கீழே அமர்ந்து இலையில் சாப்பிட்டது, திருவிழா சடங்குகள், காலையில் பழையசாதம் சாப்பிட்டது என்று எதைப்பட்டியலிடுவது நம் முன்னோர்களின் அறிவை அறிய..அவர்கள் படிக்காத மேதைகளாய் இருந்திருக்கிறார்கள்..நாமோ படித்த முண்டங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..கோவில்களில்  கடவுள் இருப்பதாக நம்பவேண்டாம்..பழங்கால கோவில்கள் அனைத்தும் மனிதனுக்கு புத்துணர்ச்சியை வழங்கிய சக்திமையமாக இருந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை..

கடவுளை நம்புகிறீர்களோ இல்லையோ இயற்கையை நம்புங்கள்..மூடநம்பிக்கைகளையும் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்கள்..அதிலும் ஏதாவது அறிவியல் உண்மை ஒளிந்திருக்கலாம்..ஆலங்குச்சியையும், மாட்டுச்சாணத்தையும் நம்மூரிலும் பாக்கெட்டில் விற்கும் காலம் வரலாம்..விடுபட்டவைகளை விமர்சனத்தில் விவாதிப்போம்..மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் என்னும் கொன்றைவேந்தன் வரிகளோடு விடைபெறுகிறேன்...நன்றியுடன் கலியபெருமாள்..