Tuesday 30 April 2013

சின்னக்குயில் சித்ராவின் இனியகீதங்கள்- எனக்குப் பிடித்த பாடல்கள்..

    முழு ஆண்டுத்தேர்வு முடிந்து பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டாச்சு.. ஒரு வாரமா வீட்லதான் இருக்கன்..அதான் தினமும் ஒரு பதிவெழுதி உங்களையெல்லாம் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறேன்..இந்த ஒருமாதம் பொறுத்துக்கொள்ளுங்கள்..ஸ்கூல் ஆரம்பிச்சிட்டா அதிகமா தொல்லை கொடுக்கமாட்டேன்..ஓகேவா..

சரி மேட்டருக்கு வரன் ..உங்களுக்குத்தான் தெரியுமே நம்ம மியூசிக் ஆர்வத்தைப் பத்தி...நமக்கு ரொம்ப புடிச்ச சுவர்ணலதா பாடல்கள் பத்தி ஒரு பதிவு எழுதியாச்சு...போனவாரம் சித்ரா அக்கா ஃபோன் பண்ணி ரொம்ப கோச்சிக்கிட்டாங்க..சுவர்ணலதா பாட்டுதான் எழுதுவியா..என் பாட்டெல்லாம் எழுதமாட்டியானு கேட்டாங்க..(உண்மையத்தான் சொல்றங்க)..அவங்களோட ஆசையை நிறைவேத்தத்தான் இப்பதிவு..(அதுக்கு எங்க உயிர ஏன்டா வாங்குறனு கேக்கக்கூடாது)..

ஓகே மறுபடியும் மேட்டருக்கு வரன்..நம்ம சித்ரா அக்கா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தாலும் எனக்குப் பிடித்த பத்து பாடல்களை மட்டும் உங்களோடு பகிர்கிறேன்..உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

1.பாடல் : கண்ணாளனே எனது கண்ணை..

படம்:  பம்பாய்.

மனதுக்குள் காதலை வைத்துக்கொண்டு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் பெண்ணின் மனதை சித்ராவின் குரலில் கேட்கும்போது அருமையாக இருக்கும்..நான் இந்தப்பாடலை இதுவரையில் ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்..தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றுத்தந்த பாடல்..

2.பாடல்:  கருவாப்பையா கருவாப்பையா

படம் : தூத்துக்குடி.

இந்தப் பாடலுக்காகவே  ஹிட்டாகிய படம்..இந்த பாடலை சித்ராவைத்தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.இப்படியொரு இனிமையான குரல் உள்ள பாடகிகள் இதன்பிறகு தோன்ற வாய்ப்பேயில்லை..

3.பாடல்:  இதுதானா

படம் : சாமி

திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணநாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவரின் மனதில் ஓடும் ரிங்டோன் இப்பாடலாகத்தான் இருக்கும்..(கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பாட்ட ஏன்டா கேட்டோம்னு நெனைப்பாங்க..அது வேற விஷயம்.)

4பாடல்:  ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.

படம் : புன்னகை மன்னன்.

 பள்ளியில் என்னுடன் பணிபுரியும் என் நண்பன் புண்ணியமூர்த்திக்கு மிகவும் பிடித்த பாடல்..அவனால்தான் இப்பாடலை அதிகம் கேட்க ஆரம்பித்தேன்..காதல் பாடல்களைப் பாடுவதில் சித்ராவிற்கு இணையாக இன்னொரு பாடகி இவ்வுலகில் தோன்றமுடியாது..

5.பாடல்:  பாடறியே படிப்பறியே

படம் : சிந்துபைரவி

நம்ம சின்னக்குயிலை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த பாடல்..இந்தியாவிலேயே முதல் பாடலுக்கு தேசியவிருது பெற்ற பாடகி சித்ராவைத்தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை..

6.பாடல்:  இந்தமான் உந்தன் சொந்தமான்

படம் : கரகாட்டக்காரன்.

பாடல்களுக்காக மட்டுமே படங்கள் ஓடியது அக்காலம்..இப்படத்தில் வரும் மாங்குயிலே பூங்குயிலே பாடலைவிட இப்பாடல்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் சித்ராவுக்காக..

7.பாடல்:  உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது

படம் : பாண்டிநாட்டுத்தங்கம்

கார்த்திக் ,நிரோஷா நடித்த படம்..படத்தின் பெயர் பாண்டிநாட்டுத்தங்கம் என்றுதான் நினைக்கிறேன்..இசையை ரசிப்பவர்கள் எல்லோருக்கும் இப்பாடலை நிச்சயம் பிடிக்கும்..இப்பதிவையும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

8.மாருகோ மாருகோ

படம்:  வெற்றிவிழா

இப்பாடல் ஏன் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லத்தெரியவில்லை..வித்தியாசமான வேகமான பாடல்..சித்ராவின் குரலில் துள்ளலான ஒரு பாடல்..

9.பாடல்:  செம்பூவே பூவே

 படம்: சிறைச்சாலை

சித்ராவின் பாடலில் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்...காதலும் காமமும் கலந்த பாடல்..எஸ்.பி.பியும் சித்ராவும் போட்டிபோட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள்..பாடலின் வரிகளுக்கு சித்ரா உயிர் கொடுத்திருப்பார் அருமையாக- வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ-என்னைக்கவர்ந்த வரிகள்..

10.பாடல்:  ஒவ்வொரு பூக்களுமே

படம்:  ஆட்டோகிராஃப்

துன்பத்தில் வாடுபவர்களுக்கும் வாழ்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும் நம்பிக்கையை வழங்கிய பாடல்..அதுவும் நம்ம சினேகா பாடும்போது அப்பாடல் இன்னும் அழகாக இருக்கும்..

இதைவிட சிறந்த ஏதேனும் பாடல்கள் இருப்பின் கருத்துரையில் பகிருங்கள்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி....


2 comments:

  1. பரபரப்பான நேரங்களிடையே இந்த பாடல்களை நினைவுப்படுத்தி மகிழ்ந்தேன். காற்றில் கரைந்து செவிக்குள் இனிமையாய் நுழைந்து கொண்டிருந்தது பாடல் வரிகள்..! இனிய ரசனை! நல்லா பாடுவீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. பெரிதாக இசை அறிவெல்லாம் கிடையாது.ஆனால் ஓரளவு நன்றாகப் பாடுவேன்.நன்றி தோழி.

      Delete