Sunday, 31 December 2017

போதையில்லாத புத்தாண்டு வேண்டும்!!?

புத்தாண்டை எண்ணி புலகாங்கிதம் அடையமுடியவில்லை... புதுவசந்தம் வந்ததென்று புன்முறுவல் பூப்பதில்லை..

புத்தகச் சுமையில்லா பள்ளி என்று வருமோ,
 புகையில்லாத காற்று என்று இருக்குமோ,

போதையில்லா சமூகம் என்று தோன்றுமோ,

புழுதி இல்லாத சாலைகள் உருவாகுமோ,

புரிதலுடன் குடும்பங்கள் என்று இணையுமோ,

புதுமைகளைப் படைக்க இளைஞர்கள் என்று புறப்படுவார்களோ,

பொதுவுடைமைக்காக புரட்சிகள் உதயமாகுமோ,

பூசல் இல்லாமல் மாநிலங்கள் ஆகுமோ,

பூரணமான புத்தாண்டு அன்றுதான் என் தேசத்திற்கு...

இருந்தாலும் என்றாவது ஒருநாள் என் தேசம் முன்னேறிவிடும் என்று வாழும் நேர்மறை மனிதர்களுக்காக என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Thursday, 28 December 2017

இந்திய மாநிலங்களும் தலைநகரங்களும் -இசை வடிவில்

அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் மீண்டும் பதிவுலகம் பக்கம் தலைகாட்டிவிட்டு போகலாம் என்று வந்தேன்...போனவருடம் இந்திய மாநிலங்கள் கற்பித்தல் சிறுமுயற்சி என்னும் தலைப்பில் ஒரு சிறு பதிவு எழுதியிருந்தேன்..அதற்கு சில ஆசிரியர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது..என் நண்பர்களிடம் அதைப்பற்றி கூறியபோது மாநிலங்கள் பெயர் மட்டும்தான் பாடுவார்களா? தலைநகரங்கள் தெரியாதா? என்று கேட்டார்கள்..அந்த கேள்விதான் இன்று பதிலாக வந்திருக்கிறது...ஏதோ எனக்குத் தெரிந்த மெட்டில் ஒரு பாடலாக உருவாக்கியிருக்கிறேன்...இசையமைத்துப் பாடுமளவுக்கு இசை ஞானமெல்லாம் கிடையாது..இந்த காலத்து மாணவர்களுக்கு எப்படிப் பாடினால் பிடிக்கும்  என்று யோசித்து முயற்சித்திருக்கிறேன்..என் முயற்சி வீண்போகாது என்று நம்புகிறேன்...அடுத்த வாரத்திற்குள் என் மாணவர்களை மாநிலங்களையும் தலைநகரங்களையும் பாடவைத்துவிடுவேன்  என்று நம்புகிறேன்...


உங்களுக்கும் பிடித்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் முயற்சித்துப் பாருங்கள்...உண்மையைச் சொல்லப்போனால் பலநேரங்களில் வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரத்தைக் கேட்டால் நமக்கே தடுமாற்றம் வரும்..ஆனால் இப்பொழுது நான் கற்றுக் கொண்டேன்... என்னாலான இந்த சிறுமுயற்சி யாருக்கேனும் பயன்பட்டால் கடலளவு மகிழ்ச்சி..என் முகத்தைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்னுதான் முகம் காட்டாமல் பாடியிருக்கிறேன்..அடுத்த பதிவில் சந்திக்கும்வரை உங்கள் கலியபெருமாள்..உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து....